அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, March 1, 2017

காக்கும் கரங்கள்!


புறவிருந்து நோக்கி வரஇருந்து காத்துப்
     பெண்ணாய்ப் பிறந்ததனால்,
பிறந்தஇடம் வாழ்த்தப் புகுந்தஇடம் போற்றப்
     பொறுமை காத்திடுவர் - பெண்கள்
     பொறுமை காத்திடுவர்!

வரவிருந்தால் சேமித்துக் குறையிருந்தால் நிறைவித்துக்
     குடும்பத்தைக் காத்திடுவர்;
வரவில்லாப் பொழுதினிலே சேமிப்பைத் தந்துதவி
     உற்றுளி உதவிடுவர் - பெண்கள்
     உற்றுளி உதவிடுவர்.

குன்றாப் புகழுடைய மாதர் பலருண்டு
     கொண்டாடும் குணமுமுண்டு;
பொன்றாத் துணையாய்க் கொண்டவர்பால் நின்று
     பொருந்தி வாழ்ந்தனரே - இசைபடப்
     பொருந்தி வாழ்ந்தனரே!

அறவழியும் சத்தியமும் காத்துநின்ற காந்திக்கும்
     முன்வடிவு யாரென்பீர்?
அறம்காத்தத் தில்லையாடி வள்ளியம்மை அறிவீரோ?
     அறம்காத்து உயிரிழந்தார் - மாண்பின்
     அறம்காத்து உயிரிழந்தார்!

விஞ்ஞானம் கைக்கொள்வர் விண்ணையும் சாடிடுவர்!
     எல்லையில் அச்சுறுத்தும்
அஞ்சலர் வெருண்டோட ஆயுதமும் கைக்கொண்டு
     வீரம் விளைக்க வந்தார் - குன்றா
     வீரம் விளைக்க வந்தார்.

போக்கிட மில்லாமல் பெண்ணில்லை காண்பீர்!
     புறங்காணல் என்றுமிலை;
போற்றும் நீதியினால் புவியாள வந்துற்ற
     பெண்கள் உயர்ந்தவரே! - என்றும்
     பெண்கள் உயர்ந்தவரே!

சட்டங்கள் திட்டங்கள் அத்தனையும் ஆளவந்தார்;
     சாற்றும் நெறிகண்டு,
பட்டங்கள் பலபெற்று பாரினில் ஓங்கிநின்றார்;
      வாழிய வாழியவே!- பெண்கள்
      வாழிய வாழியவே!