புறவிருந்து நோக்கி வரஇருந்து காத்துப்
பெண்ணாய்ப் பிறந்ததனால்,
பிறந்தஇடம் வாழ்த்தப் புகுந்தஇடம் போற்றப்
பொறுமை காத்திடுவர் - பெண்கள்
பொறுமை காத்திடுவர்!
வரவிருந்தால் சேமித்துக் குறையிருந்தால் நிறைவித்துக்
குடும்பத்தைக் காத்திடுவர்;
வரவில்லாப் பொழுதினிலே சேமிப்பைத் தந்துதவி
உற்றுளி உதவிடுவர் - பெண்கள்
உற்றுளி உதவிடுவர்.
குன்றாப் புகழுடைய மாதர் பலருண்டு
கொண்டாடும் குணமுமுண்டு;
பொன்றாத் துணையாய்க் கொண்டவர்பால் நின்று
பொருந்தி வாழ்ந்தனரே - இசைபடப்
பொருந்தி வாழ்ந்தனரே!
அறவழியும் சத்தியமும் காத்துநின்ற காந்திக்கும்
முன்வடிவு யாரென்பீர்?
அறம்காத்தத் தில்லையாடி வள்ளியம்மை அறிவீரோ?
அறம்காத்து உயிரிழந்தார் - மாண்பின்
அறம்காத்து உயிரிழந்தார்!
விஞ்ஞானம் கைக்கொள்வர் விண்ணையும் சாடிடுவர்!
எல்லையில் அச்சுறுத்தும்
அஞ்சலர் வெருண்டோட ஆயுதமும் கைக்கொண்டு
வீரம் விளைக்க வந்தார் - குன்றா
வீரம் விளைக்க வந்தார்.
போக்கிட மில்லாமல் பெண்ணில்லை காண்பீர்!
புறங்காணல் என்றுமிலை;
போற்றும் நீதியினால் புவியாள வந்துற்ற
பெண்கள் உயர்ந்தவரே! - என்றும்
பெண்கள் உயர்ந்தவரே!
சட்டங்கள் திட்டங்கள் அத்தனையும் ஆளவந்தார்;
சாற்றும் நெறிகண்டு,
பட்டங்கள் பலபெற்று பாரினில் ஓங்கிநின்றார்;
வாழிய வாழியவே!- பெண்கள்
வாழிய வாழியவே!