அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, October 23, 2019

புத்தா!

புத்த தேவா
என்னை மன்னித்துவிடு!
ஒட்டி உலர்ந்த
உன் யாக்கை
எனக்கு வேண்டாம்.
எல்லோரும் எண்ணுகிறார்கள்
பசியின் ஆழ்ந்த மயக்கத்தில்
நீ பட்டறிவு பெற்றதாக;
நானறிவேன் அதை!
வெயிலில் வாடிக்
களைத்த உனக்கு
இதம் தந்ததே
அந்தப் போதிமரம்;
இதம் தந்த அறிவே
உனது புத்துயிர்ப்பு!

நீ புத்தனானது
போதிமரத்தால் அல்ல,
என்று நீ உன்
அரண்மனையின் இதம் நீங்கி
வெளிப் போந்தாயோ
அந்த நொடி...
ஓ கௌதமா
இல்லை இல்லை..
ஓ புத்ததேவா!

என்னை மன்னித்துவிடு!
ஒட்டி உலர்ந்த
உன் யாக்கை
எனக்கு வேண்டாம்!
என்னைப்போல் நீயும்
வறுமையில் வாழ்ந்திருந்தால்...
வெந்ததைத் தின்று
விதிவந்து செத்திருப்பாய்!
பசியில் பட்டறிவு
துளிர்க்கும் எனச் சொன்னது யார்? அரண்மணையின் இன்ப வாழ்வை
எனக்கும் தா!
அந்தத் துளிநேரத்தை...
நீ நீங்கிய போழ்தின்
ஆழ்ந்த அமைதியை...
நானும் பெறவேண்டும்!


தமிழில் பிறமொழிச் சொற்கள் வழங்கும் முறை

'வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்கு உரியவாய் வாரா' (சேனாவரையர்).

பொதுவாக, பெயர்ச் சொற்களையே ஒரு மொழி கடனாகப் பெறும். இதை மனதில் நிறுத்தி, பிறமொழிச் சொற்கள் தமிழில் வழங்கும் முறைகளைக் காண்போம்.

1  த், ஸ், ல் எனும் இடையெழுத்துகள்  'ற்' ஆகத் திரியும்
உத்சவம் - உற்சவம்
பஸ்பம் - பற்பம்
கல்பம் - கற்பம்

2 'ட' வில் தொடங்கும் பிறமொழி முதற் சொற்கள் 'த' என முதற்சொல்லாகத் திரியும்
டமருகம் - தமருகம்
டொப்பி - தொப்பி

 3 'ட' எனும் முதல் எழுத்து  'இ' முன்னெழுத்தைப் பெறுவதும் ஆம்.
டம்பம் - இடம்பம்

4 ஆகார ஈறு ஐகாரமாகும்
பிக்ஷா - பிச்சை

 5 ர, ல முன்னெழுத்துக்கு முன் 'இ' துணை முன்னெழுத்து சேரும்
ராமன் - இராமன்
லாபம் - இலாபம்


நிலா முகம்

நசைஇ பெருகிய ஒளிறுவா னிலவும்
வசையி லெழிலிய தன்னுரு மகிழ்ந்திட, வான்பொரு தேந்திய வளனெயி லடைஇய
தான்சிறை புக்கென வேண்டாவா மென்றிட, எய்தவு வந்ததெம் மில்லெனுங் குடிலே
எய்துப சிலைகொள் நீள்கோ டோட்டிட,
வீழ்ந்தது முன்றிற் கொட்டிற் கழுநீர்;

போழ்தெம் மேதியோ உறக்கம் நீங்கியே
மருங்குல் தணிப்பத் தன்வாய் வைத்திடக் கலங்கிய நீரினில் கலைந்திடு வுருகாண்
மருங்கி லோடி முகிழ்முகம் புதையி
வாழ்ந்தேம் நகையொடும் புத்தேள்
வாழ்ந்திடு மெந்தை யெந்தெய் வருளே!

பொருள் :
ஒளிதரும் வான் நிலவு குற்றமில்லாத தனது அழகிய உருவத்தைக் காண பெருகிய விருப்பம் கொண்டு, வானளாவிய கோட்டையுடைய அரண் போன்ற வீட்டிற்குச் சென்றால் சிறைபட நேருமென்று எண்ணி, சிறு குடிலாகிய எம் வீட்டில் உள்ள முற்றத்துக் கொட்டிலில் கழுநீர் கூடிய தொட்டியில் நெடுங்கோடு உடைய தன் ஒளியைப் பரப்பியது. அப்போது, எம் வீட்டு எருமை மாடு உறக்கம் நீங்கித் தனது தாகம் தீர்க்க வேண்டி அத் தொட்டியில் வாய் வைத்தது. அதுபோது கலங்கிய தன் முகம் கண்டு வருந்திய நிலவு மேகக் கூட்டத்தில் தன் முகத்தை மறைத்துக் கொண்டது. குடிசையில் வாழ்ந்தாலும் நாங்களும் நகை செய்து மகிழ்வுடன் வாழச் செய்தது இறைவன் அருளே!

Sunday, October 13, 2019

மிச்சம்

தேநீர் பருகுதல்
ஒன்றும் பெரிதில்லை
காலையில்...
மாலையில்...
மனம் மகிழ...
கிண்ணத்தை முழுதாக்கி
எண்ணம்போல் பருகியிருக்கிறேன்.

தேநீர் பருகுவது
ஒன்றும் பெரிதில்லை
ஆனால்,
என்றாவது ஒருநாள்
அதன்
கடைசி சொட்டுவரை
பருகியுள்ளேனா?

இன்றும் என்
அருமைத் தேனீர் என்முன்!
பருகிக் களித்துக்
கவிழ்த்துப் பார்க்கிறேன்
கிண்ணத்தில் ஏதோ
இன்னமும் மிச்சமுள்ளது
எதுவென்றுதான்
எனக்குப் புரியவில்லை?


தொலைந்து போனவன்

பொருட்கள் புத்திசாலிகள்!
வைத்த இடத்தில் அவை
பாதுகாப்பாய் அமர்ந்துகொள்ளும்;
இருக்குமிடத்தில்
பதவிசாய் அமைந்துகொள்ளும்;
தேவைக்குமேல் இடத்தை
அடைத்துக் கொள்வதில்லை;

பொருட்கள் புத்திசாலிகள்
அவை தொலைந்துபோவதில்லை;
மனிதனைத் தொலைத்துவிட்டு
தேடிக் கொண்டிருப்பவை!

மதுக் கிண்ணம்

எத்தனையோ தடவைகள்
அது குடித்திருக்கிறது
விதவிதமாக
மூச்சு முட்ட
மூக்கு முட்ட
தளும்பத் தளும்ப
ஆயினும்
ஒருபோதும் அது
போதை அடைந்ததில்லை.


ஆலமரம்

போதகரின் வீடு!
தட்டினேன் திறக்கப்பட்டது
'கடவுளைக் காண வேண்டும்' நான்
'வலதுபக்கத் தெருவில்
கடைசியில் இருப்பது தேவாலயம்
பாதர் இருப்பார்
சென்று காத்திருங்கள்
சற்றுநேரத்தில் வருவேன்
நாம் பேசலாம்' என்றார்
காத்திருக்க நேரமில்லை
கிளம்பிவிட்டேன்.

இமாம் அவர்கள் வீடு!
பூட்டிய கதவில்
எட்டிப் பார்த்தது முகம்
'கடவுளைக் காண வேண்டும்' நான்
'தொழுகை நேரம் இது
செல்லுங்கள் பள்ளிக்கு
அத்தாவும் புறப்பட்டாச்சி
சல்லச் சொன்னாக'
பதில் வந்தது
காத்திருக்க நேரமில்லை
கிளம்பிவிட்டேன்

கிராமத்து எல்லை
களைப்பு நீக்கும் ஆலமரம்
பக்கத்தில் திருவோடு
படுத்திருந்தவன் பிச்சைக்காரன்
'கடவுளைக் காண வேண்டும்' நான்
'பார்த்துக் கொண்டிருக்கிறாய்' அவன்.

- எது? இந்த ஆலமரமா?
பதிலில்லை
- எதிரே காணும் காரிருளா?
பதிலில்லை
- எங்கும் பரவிய இப் பெருவெளியா?
பதிலில்லை
- போதகரும் இமாமும்...
"நிறுத்து! போதகர் பேசுவார்
பேச்சுதான் கடவுள் அவருக்கு!
இமாம் தொழுவார்
தொழுகையே கடவுள் அவருக்கு!"

- அப்படியானால், என்னை
இறையில்லம் ஏகச் சொன்ன
காரணம்?
"அங்கேதான் அவர்கள் உன்னைத் தன்வயப்படுத்த முடியும்"
- அப்படியானால், நீதான் கடவுளா?
"பைத்தியம்" என்று சொல்லித்
தூங்கிவிட்டான் பிச்சைக்காரன்!



பழைய மாணவன்

நான் உங்கள்
பழைய மாணவன்
நினைவிருக்கிறதா ஐயா?

இல்லையே, தம்பி!

உங்களது ஆசியால்
இன்று நான்
இந்நகரின் ஆணையர்.

நல்லது! உன் மனதுக்கு
உன்னைச் சிறப்பாக
அறிமுகப்படுத்திக் கொண்டாய்;
அது சரி!
உன் மனதுக்கு
என்னை எவ்வாறு
அறிமுகம் செய்துள்ளாய்?
அதைச் சொல்லு ...