அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, November 29, 2019

அயற்சொல் மடலம்

தமிழில் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சொற்களைக் காண கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும். 

Wednesday, November 20, 2019

பெயர் வாங்கித் தந்தவன்

அவன்
வேறு யாருமில்லை
எனது
சட்டைப் பைக்குள்
வாசம் செய்யும்
தனிச் செயலன்;

அவனுக்கு
இவ்வுலக வேலை
எதுவுமில்லை
ஆனாலும்
என்னைப்
பெரிய ஆளாக்கிப்
பார்க்க வேண்டுமென்று
தீராத விருப்பம்!
அதனால் என்மீது
குறையுண்டு அவனுக்கு!

அவன்:
தமிழு தமிழுனு
படிக்கிறது என்னத்துக்கு?
போதும் ஐயா படிச்சது!
நாலு டாபிக்குல
நாலு சோக்கு அடிச்சமா
நாலுபேர் சிரிச்சாங்களா
பொழச்சமான்னு போங்க;
அவ்ளோதான் வாழ்க்க!

... இவ்வளவு சொல்லியும்
... அங்க என்ன பண்றீங்க,
அது என்ன டுவீட்டா?

நான்:
இல்லை,
இதுபேர் கீச்சு!

அவன்:
தெரியும்... தெரியும்...
ட்வீட்டுன்னு சொன்னா
வாய் கொறஞ்சி போகாது
அத எங்கிட்ட உடுங்க
இன்னைக்கு மட்டும்
நான் போடுறேன் ட்வீட்டு
அப்புறம்
லைக் எத்தனை
ரீட்வீட் எத்தனை
நீங்களே பாருங்க!

நான் :
டேய்.. டேய்..
என் கைபேசிய எடுக்காதே

அவன் :
... இந்தா புடிங்க
போட்டாச்சி ட்வீட்டு

ஐயாமார்களே!
சற்று நேரத்திற்குமுன்
போட்ட கீச்சு எனதில்லை!

என் செயலன்
என்னதான் போட்டிருப்பான்?
எட்டிப் பார்த்தால்...
அதற்குள்...
அந்தக் கீச்சிற்குக் கீழே
எட்டுத் தொடுப்பு!
பத்து விருப்பு!

இதுதான்
அவன் போட்டிருந்த கீச்சு,
"எந்த மரமானாலும்
காய்ச்சித் தொங்குகிற
எல்லாப் பழமும்
கொய்யாப் பழம்தான்"

Thursday, November 7, 2019

மரம் இல்லாது மழையேது

ஒற்றை மார்போடு
மலைமேலேறிய கண்ணகி
மரத்தடியில் நிற்பதாகத் தன்
கணவனுக்குத் தூதுவிட,

கோவலனின் புட்பக விமானம்
கண்ணகியைத் தேடி
சுற்றிச்சுற்றி அலைந்தது
எந்த மரமென்று தேடியல்ல;
மலையில் ஏது மரம்
என்ற வாதையில்.

கணவன் வாரானென்று
சலித்துப் போய்
மொட்டைப் பாறையில்
குதித்து உயிர்விட்ட
கண்ணகியைக்
கண்டு வருந்திய மேகம்
இப்போதெல்லாம்
நீராய்ச் சொரிவதில்லை
மழையாய்ப் பெய்வதில்லை
அங்கங்கே
காறித் துப்பிவிட்டுக்
கடந்து செல்கிறது.

நானோர் தனியன்

பிறந்தநாள் முன்னெடுப்பு!
பரிசும் பணமும் கையில்;
முதியோர் இல்லம் செல்லும்
பெருமைக்குப் பேர்
கருணை என்றாகியது.

முதியோர் இல்லத்தில்
பரிசும் பணமும்
கொடுத்து முடிந்த வேளை!
பெரியவர் ஒருவர்
அருகமர்ந்து சொன்னார்,
“பாவம் நீங்கள்!
ஆண்டவன் உங்களை
இப்படியும் சோதிப்பானோ?”

“என்ன ஆச்சு எனக்கு?”

“ஆண்டவனுக்கு உகந்தவர்
அவன் பாதுகாப்பில்
இருப்பார்தானே;
பிடிக்காது போனால்
உலகில் அலைந்து திரிய
விடுவார்தானே?”

"ஆமாம்!"

"நான் ஆண்டவனுக்கு உகந்தவன்;
பாருங்கள் என்னை
நானோ
எங்கும் அலையவில்லை
இங்கேயே அமைந்துள்ளேன்.
நீங்கள்தாம் பாவம்!
கடவுளும் கைவிட்டாரோ?
அலைஅலையென
அலைகிறீரே”

சட்டெனத் திடுக்குற்றேன்!
அவர் கூறியது
என் மனதையா?
மனம் தாங்கும் உடலையா?

அகண்ட இப்புலனத்தில்
மனிதர் தம் முன்னே
தாமே கட்டிய
மாபெரும் கம்பிவலை;
வலைக்குள் குரங்கென
விடாது சுற்றும் அடம்!

அப்பக்கம் இப்பக்கம்
கம்பிவலை நடுப்பக்கம்;
எப்பக்க மனிதன் கைதி,
எப்பக்க மனிதன் கங்காணி?
யாருக்கு யார் கைதி?

நானோ கைவிடப்பட்டவன்?
நானே தனியன்!