அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, March 28, 2018

மண்ணில் புதைந்துள்ள பாண்டியர் போர்த்தளம்


உக்கிரன்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.

ஊரைச் சுற்றித் துல்லியமான நீள்வளையத்தில் 6 கிமீ நீளத்தில் அகழியுடன் கட்டப்பட்ட கோட்டை.. மத்தியில் மேடான இடத்தில் கோயிலுடன் கூடிய போர்த்தளம்.

மதுரையை ஆண்ட பராந்தகன் நெடுஞ்சடையன் (கிபி 765-790) என்ற பாண்டிய மன்னன் கரவந்நபுரத்தில் அகழியும், மதிலும் , கோட்டையும் அமைத்து அப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான நிலப்படையை வைத்திருந்தான் என்பது குறித்த கல்வெட்டு மதுரை ஆனைமலையில் உள்ளது. 

இம்மன்னனது காலத்திய மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும்  கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே மிகப் பழமையானது எனக் கருதப்படுகிறது. . 

மதுரையில் பராந்தகன் காலத்து ஆனைமலைக் கல்வெட்டில் ''களக்குடி நாட்டுக் கரவந்தபுரம்' என்று குறிப்பிடப்படுவது. ஆதலால் கோட்டையைக் கட்டி, போர்த்தளமாகப் பயன்படுத்தியவன் பராந்தகன் நெடுஞ்சடையனே என்ற தகவல் உறுதிப் படுத்தப் படுகிறது. 

களக்குடி எனும் ஊராளது, உக்கிரன்கோட்டைக்கு அருகில் உள்ள மற்றுமொரு சிற்றூர். இரு ஊர்களுக்கும் நடுவே 'சிற்றாறு' எனும் தாமிரபரணியின் துணை ஆறு ஓடுகிறது. இந்த ஆறு குற்றால மலையிலிருந்தும் அதன் நீர்வீழ்ச்சிகளிலிருந்தும் தொடங்குகிறது. கடனாநதி ஆறும் இவ்வாற்றில் வந்து சேர்கிறது.  அக்காலத்தில், களக்குடி,  குடியிருப்புகளுடன் கூடிய பெரிய ஊராக இருந்திருக்கலாம்.

பராந்தகனது காலத்தில் மாறன் காரி, மாறன் எயினன், சாத்தன் கணபதி, ஏனாதி சாத்தஞ் சாத்தன் ஆகியோர் அமைச்சர்களாகவும் மா-சாமந்தர்களாகவும் பேர்பெற்று வாழ்ந்தவர்கள் ஆவார். இவர்கள் அனைவரும் கரவந்தபுர நாட்டினர் என்பது சிறப்பான செய்தியாகும். இத்தகைய பேர்பெற்ற கரவந்தபுரமே இன்றைய உக்கிரன்கோட்டையாகும்.

"பராக்கிரம வீரநாராயணன் என்ற உக்கிர பாண்டியனால் (கிபி.768-815) இக் கோட்டை கட்டப்பெற்றது "  என்ற வரலாறு மெய்ப்பிக்கப் படவில்லை. மேலும் இவனது காலமும் மிகப் பிற்பட்டதாகவே இருக்க வேண்டும். ஆயினும், இவ்வூர் அவனது பெயரால் உக்கிரன்கோட்டை என அழைக்கப் படுவதால், இம்மன்னன் தென்காசியிலிருந்து ஆண்ட குறுநில மன்னனாக இருக்கவேண்டும். சிவன் கோயிலில் அல்லது கோட்டையில் இவன் மாற்றங்கள் செய்திருக்கலாம்.

கோட்டையும் அதைச்சுற்றிய அகழியின் எச்சங்களும் இன்றளவும் காணக் கிடைக்கின்றன.

கோட்டை, அரண்மனை, வாணிகத்தலம் போன்ற பண்டைய அமைப்பு உள்ள இடங்களில், அதைச் சுற்றி எல்லா தேவைகளும் நிறைவேற்றும் வகையில் குடியிருப்புகள் அமையப் பெறும்; இது ஒரு பொதுவான விதி. அதுபோலவே, கோட்டையும் படைத்தளமும் கொண்டு, வாணிகத் தலமாகவும் இருந்ததனால், இவ்வூரில் எல்லா இன மக்களும் இருந்துள்ளனர்; இப்போதும் உள்ளனர். கோயில் காரியங்கள், வேளாண்மை, தச்சு, கொல்லவேலை, கோட்டைக் காவற்பணி என அவரவர் வேலையைச் செய்ய மக்கள்  குடியிருப்புகள் கோட்டைக்கு உள்ளேயே அமையப்பெற்று இருந்திருக்கின்றன.

திருநெல்வேலி - சங்கரன்கோயில் சாலையில், அழகியபாண்டியபுரம் ஊரிலிருந்து தெற்காக 5 கிமீ தொலைவில் உள்ளது இவ்வூர். திருநெல்வேலியிலிருந்து 32கிமீ தூரத்திலும்  சங்கரன்கோயிலிலிருந்து 41 கிமீ. தூரத்திலும் உள்ளது.

ஊரின் ஓர் ஓரமாக அழகிய சிவன் கோயில் உள்ளது. யாருக்கும் இடைஞ்சல் இல்லாது சமத்தாக இருந்து வருகிறது. சுவாமி சொக்கலிங்கர் உடனுறை மீனாட்சியம்மை கோயில். 1200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலும் உக்கிர பாண்டியன் காலத்தில் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

7-8ஆம் நூற்றாண்டுத் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மூன்று உள்ளன.
12ஆம் நூற்றாண்டுத் தமிழ் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.
18ஆம் நூற்றாண்டுத் தற்காலத் தமிழ் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன. 

மேலும், கோயிலுக்கு வெளியே மண்தரையில் கிடக்கும் இரண்டு தூண்களிலும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.  எழுத்துகள் பல இடங்களில் தேய்ந்து போய் உள்ளன. மேலும் தேய்ந்து போகாமல் இருக்க, கோயிலுக்கு உள்ளேயே ஓரிடத்தில் நாட்டிவைத்துப் பாதுகாத்தால் நல்லது. கோமுகியின் அருகேயுள்ள கல்வெட்டின் முதல் வரி எழுத்துகள் காரைச் சாந்தால் மறைக்கப்பட்டு விட்டது. அது சுத்தம் செய்யப்பட வேண்டும். 

ஆக, பெரும் கல்வெட்டுப் புதையலே இங்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை.

திரு. கண்ணன் பட்டர் அவர்கள் கோயிலுக்கு வருபவர்களிடம் அழகான விளக்கங்கள் தந்து உதவுகிறார். எங்களுக்கும் அவரது உதவி கிடைத்தது. அவருக்கு மிக்க நன்றி.

இக்கோயில் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருகாலப் பூசை நடைபெறுகிறது. கோயில் கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டு விட்டனவா எனத் தெரியவில்லை.

கோயில் மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகாரத்தின் மேல் விதானத்தில் ஏழு இடங்களில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.பாண்டிய மன்னர்கள் கட்டிய கோயிலின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. இரண்டு இடங்களில் மகர மீன் போன்றும், ஒரு இடத்தில் பெரிய மீன் சிறிய மீன் ஒன்றை விழுங்குவது போலும் உள்ளது.மற்றவை வழக்கமான மீன் சின்னங்களே.

கோயில்வாசலின் அருகே உள்ள உத்திரத்தில் சங்கு சக்கரம் பொறித்த வைணவ அடையாளமும் உள்ளது. சுற்றுப் பிரகாரத்தின் மேற்குப் பக்க மேடையில், மிகப் பழைய லிங்கம், திருமால் திருமேனி ஆகியவை வைத்துப் பாதுகாக்கப் படுகின்றன. சைவ வைணவ மேலாண்மை  இக்கோயிலில் மாறிமாறி நடைபெற்றிருந்ததை  இது வெளிப்படுத்துகிறது.

கோயிலின் உள்ளே ஒரு சுரங்கப் பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால்,  காணமுடியவில்லை. கோயில் வாசலில் அழகிய கருங்கல் திண்ணை. திண்ணையின் மேல்விதான முகப்பில் குரங்குகள் வெகு இயல்பான சிலை உருவத்தில் உள்ளன. திண்ணை,  வெளியூர் ஆட்கள் இரவில் தங்கிச் செல்ல அருமையான ஏற்பாடு. ஊருக்கு வருபவர்கள் பசியோடு தூச்கிவிடக் கூடாது என்று அக்கறையோடு உணவு அளிக்கும் பண்பாடு காத்த மேடை இது. வீடுகளிலும் இருந்த இவ்வமைப்பு இப்போது இல்லை.

இவ்வூர் வெள்ளையர் காலத்திலும் போர்ப்படைத் தளமாகச் செயலபட்டதும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் சிற்றூர்களை அயன், ஜமீன் ஆகிய அடைமொழியோடு வழங்கியுள்ளனர். 'அயன்' என்பது ஆஙீகிலேயர் அவ்வூரில் தங்கியிருந்து நேரடிக் கண்காணிப்பில் நேரடி வரிவரவு செய்துள்ள இடம். 'ஐமீன்' என்பது பிறரிடம் கொடுத்து கப்பம் வாங்கிய இடம். உக்கிரன்கோட்டையை அயன் உக்கிரன்கோட்டை என ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர். பக்கத்திலுள்ள ஜமீன் ஊத்துமலை என்பது ஜமீனுக்கு எடுத்துக் காட்டாகும்.

கிபி,2015ல் சென்னை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவ்வூரில் தங்கியிருந்து மூன்று மாதங்கள் ஆய்வு செய்துள்ளார்கள். கோட்டையின் உள்ளே மையமும் மேடுமாக இருக்கும் இடத்தில் 5 குழிகள் 4 அடி ஆழம் 15 அடி அகலத்தில் தோண்டி ஆய்வு செய்திருக்கிறார்கள்.

ஆய்வின்போது 1200 ஆண்டுகள் பழமையான ரோமநாட்டுக் கைவினைப் பொருட்களும், வேறு சில சிறியஅளவுப் பொருட்களும் (artifacts) கிடைத்துள்ளன. அவை சென்னைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு விட்டதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.  ரோம் நாட்டுடன் வாணிகம் நடந்துள்ளதையும், இவ்வூர் வாணிகத்தலமாக இருந்துள்ளதும் இதன்மூலம்  தெரிய வந்துள்ளது.

இந்த மேடான இடத்தில்தான் போர்த் தளவாடங்களைப் பாதுகாக்கும் கட்டிடம் ஒன்று இருந்திருக்கிறது. இது போர்ப் பயிற்சிக் கூடமாகவும், படைவீரர்கள் தங்குமிடமாகவும் இருந்திருக்கிறது. போர்ப்படைத்தளத்தின் அருகில் ஒரு சிவன் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. 

இந்த மேட்டிடத்திற்கு மேற்கே சொக்கநாச்சியம்மன் கோயில் உள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் குலதெய்வமாக வணங்குகின்றனர். இக்கோயில, தங்குமிடம், நீர் வசதி, அழகிய முன்மண்டபம் என விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கருவறையில் சொக்கநாச்சியம்மன் எட்டுக் கரங்களோடும் கனிவான முகத்தோடும் காட்சி தருகிறாள்.

சொக்கநாச்சியம்மன் கோயில் வளாகத்தின் உள்ளே, குலதெய்வ அய்யனார் பரிவார தேவதைகளோடு அரச மனத்தடியில் வாசம் செய்கிறார். வேறொன்றுமில்லை. வெயில் அதிகமாக அடிக்கிற ஊர்.  கருவறையில் புழுக்கம் அதிகம். அதுதான் அரச மரத்தடிக்கு இடம் பெயர்ந்து விட்டார்.

உக்கிரன்கோட்டையைக் காண இருவராகச் சென்றோம், நானும் நண்பர் அருண் பாண்டியனும். ஒருவர் காணாததை மற்றவர் சுட்டிக் காட்ட, ஒருவர் அறியாததை மற்றவர் எடுத்துரைக்க இனிதே நிறைவுற்றது எங்கள் பயணம். 

நிறைவாகக் கண்ட காட்சிகளை மனது அசைபோட. . .  இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்!

Thursday, March 22, 2018

கொற்கை

கொற்கையம் பெருந்துறை:

நீர் போற்றுதும்!  நீர் வார்க்கும் ஆறு போற்றுதும்!

தண்பொருநையாற்றின் இரு மருங்கிலும், மனிதக் குடியிருப்புகள் தோன்றி, நாகரிகம் போற்றி, வளமாக வாழ்ந்த வரலாறு காலத்தால் முந்தியது. உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் முன்னோடி 'தமிழர் நாகரிகம்' என்று சொன்னால் அதுதான் உண்மை.

மிதவை, தெப்பம், வள்ளம், கட்டுமரம், பரிசல், ஓடம், படகு, தோணி, புணை, அம்பி, வங்கம், வத்தை, நாவாய், கப்பல், திமில், உரு, கலம் எனப் பலபல பெயர்களில் கடல்கலன்கள் கட்டி உலகெங்கும் வாணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

தமிழாண்ட மன்னர்கள சேர, சோழ, பாண்டியர் மூவரும் பழங்காலம் தொட்டே திரைகடல் ஓடி வாணிகம் செய்து பொருளீட்டிய தமிழ் மாந்தர்களைப் புரந்தவர்கள்.  இத்தனை வாணிகமும் சிறப்புற நடந்தேறத் துணை புரிந்தவைதான் தமிழகத் துறைமுகங்கள்.

சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம்
எயிற்பட்டினம் (நாகப்பட்டினம்) – ஒய்மா நாட்டுத் துறைமுகம்
நீர்ப்பெயற்று (மரக்காணம்) – தொண்டைநாட்டுத் துறைமுகம்.

மேலும், பண்டைய தமிழ் மன்னர் மூவரும் அரசுக் கட்டிலின் தலைமையிடமாகத் தலைநகரையும், வாணிகப் பொருளாதாரத்திற்கானத் தலைமையிடமாக ஒரு துறைமுகத்தையும்  ஏற்படுத்திக் கொண்டனர்.
'சேரருக்கு வஞ்சியும் முசிறியும்
சோழருக்கு உறையூரும் பூம்புகாரும்
பாண்டியருக்கு மதுரையும் கொற்கையும்' எனக் கொண்டனர்.

இலக்கியத்தில் கொற்கை:

"மறப்போர் பாண்டியின் அறத்தின் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்து" - அகநானூறு
உகுவாய் நிலத்த துயர்மணல் மேலேறி
நகுவாய் முத்தீன் றசைந்த சங்கம் – புகுவான்
திரை வரவு பார்த்திருக்கும்
தென் கொற்கைக் கோமான்" -  முத்தொள்ளாயிரம்
’சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தம்’ (அகம் 201. 3-5)
என்றும்,

‘முத்துப்பட பரப்பின் கொற்கை முன்துறை’  (நற்றிணை 23-6)
‘நாரரி நறவின் மகிழ்தொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை’(அகம். 296 8-10)
’இருங்கழி சேயிறா வினப்புள் ளாரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ (ஐங்குறு. 188)
’அலங்கிதழ் நெய்தார் கொற்கை முன்றுறை
இலங்குழுத் துறைக்கு மெயிறு கெழு துவர்வாய்’ (ஐங்குறு. 185)

'திரைதந்த ஈர்ங்கதிர் முத்தம் 

கவர்நடைப் புரவி கல்வடு தபுக்கும்’

நற்றேர் வழுதி கொற்கை’  (அகம். 130)
’கலிகெழு கொற்கை’   (அகம். 350)
’கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு’ (சிலம்பு. 14. 180)
என்றும் கொற்கைப் பெருந்துறை இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன்? சிலப்பதிகார வழக்குரை காதையில், கண்ணகி மதுரை அவையில் வீற்றிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்து,
‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே! என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என பாண்டிய மன்னனைக் கொற்கை வேந்தே என்றுதானே விளிக்கிறாள்.

சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை, கொல்கை குடா’ என்றெல்லாம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

"கி.பி. 130 வரை கொற்கை பாண்டியரின் முதன்மைத் தலைநகராக இருந்தது. இதன் பின்னரே ஆட்சித் தலைமை மதுரைக்கு மாற்றப்பட்டது" எனும் அரிய செய்தியைத் தாலமி என்ற அயல்நாட்டுப் பயணியின் குறிப்பிலிருந்து உணரமுடிகிறது. கிபி130 வரை பாண்டியரின் தலைமையிடமாக இருந்தது  கொற்கையில் மணலூர் எனும் பகுதி என்பதும், பின்னர் இப்போதைய மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மணலூர் எனும் பகுதிக்கு மாற்றப்பட்டது என்பதும் அறியத் தக்கது. 

கொற்கை,  விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன்  முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த செய்தியை  இலக்கியங்களில் காணமுடிகிறது. தற்போதைய தொல்லாய்வுகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. பிற்காலத்தில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான்.எனும் செய்தியும் இலக்கியத்தில் உண்டு.

கொற்கை, பண்டைய தமிழகத்தின் பெரும் துறைமுகம்.  யவனரும் அரபியரும் சீனரும் தமிழரோடு கலந்து பெருமித நடைபோட்ட மண். பொன்னும் மணியும் பவழமும் முத்தோடு உரசி 'கலுங் கலுங்'கென ஓசையிட்டுத் தோளில் இட்ட துணிப்பைகளில் குலுங்கத் தெருவெங்கும் பன்னாட்டுக் கால்கள் நடைபயின்ற மண்.

கொற்கையின் முத்து:

இப்பி யீன்ற இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது – கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும்’   (முத்தொள்ளாயிரம். 68)
என கொற்கைக் கரையில் மட்டுமா முத்துக்கள் பிறக்கும்? கொற்கையை ஆளும் பாண்டியனின் மார்பைத் தழுவ எண்ணும் பெண்களது கண்களிலும் பிறக்கும் என்ற பொருளமைந்த பாடல், முத்துக்கள் என்றாலே அது கொற்கைதான் எனச் சுட்டிக் காட்டுகிறது.

முத்துக்களின் சிறப்பு:

‘பல்லரண் கடந்த பசும்பூப் பாண்டின்
மல்குநீர் வரைப்பிற்கொற்கை முன்றுறை
ஊதை யீட்டிய வுயர் மண லடைகரை
ஒத வெண்டிரை யுதைத்த முத்தம்’ (தொல். களவு. நூ. 11. நச். உரை மேற்கோள்)
‘பொரையன் செழியன் பூந்தார் வளவன்
கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை
பாவை முத்தம் ஆயிதழ் குவளை’ (யா.வி.சூ. 15 மேற்கோள்)
என இலக்கியங்கள் கொற்கையின் முத்தைச் சிறப்பித்துள்ளன. மேலும், கொற்கையின் முத்துக்கள் மரக்கலமேறி கடல் கடந்து சென்று பிற நாட்டு மன்னர்கள் முடியிலும், மாதர்கள் அணியிலும் இடம்பெற்றன என்பதைப் பல நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள்:

‘கொற்கைக் கோமான் தென்புலம்’ (சிறுபாணாற்றுப்படை. 62-63)
’நற்றேர் வழுதி கொற்கை’    (அகநானூறு. 130)
”விறல் போர்ப் பாண்டியன், புகழ்மலி
சிறப்பின் கொற்கை”     (அகநானூறு 201; 3-5)
”பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்” (மணிமேகலை 13;84)
‘பொற்றேர் செழியன் மதுரை மாநகர்க்கு
உற்றதும் எல்லாம் ஒழிவின்றி உணர்ந்து’   (சிலம்பு. 27; 83-84)
‘கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்’ (சிலம்பு. 27; 127)
என்று  கொற்கைப் பதியில் பாண்டியர்கள் ஆட்சி செய்தமை பற்றி பெருமைப்பட இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெளிநாட்டுத் தொடர்புகள்:

இடைச்சங்கத்தைத் தொடங்கி தமிழை வளர்த்த கொற்கை, தலைநகராக, துறைமுகமாக விளங்கி தமிழகத்தின் வளம்கொழிக்கும் பூமியாக இருந்திருக்கிறது. பல நாட்டோடு வாணிபத் தொடர்புகொண்டு இருந்திருக்கிறது.

கிளாடியசு, நீரோ (கி.பி. 54-68) போன்றவர்களோடும், பிற மன்னர்களோடும் அரச தூதுவர்களைப் பரிமாறிக்கொண்டு வணிகம் செய்து வந்திருக்கிறது.

“கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ.

பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக் காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய் மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் வாசப்.

"முத்துக்களும் பல வகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப்பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் கண்ணாடிச் சாமான்களும் கொற்கை பெருந்துறையில் வந்திறங்கின” என மதுரைக் காஞ்சியும் புறநானூரும் குறிப்பிடுகின்றன.

***** வாருங்கள், இன்றைய கொற்கையைத் தேடுவோம்! *****

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் முக்காணி என்ற அழகிய கடற்கரைச் சிற்றூர். முக்காணியிலிருந்து மேற்காகப் பிரிந்து ஏரல் நோக்கிச் செல்லும் சாலையில் உமரிக்காடு. அங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் 2கிமீ தூரத்தில் பெரிய கொற்கை என மக்கள் அழைக்கும் நாம் தேடிவந்த கொற்கை. தூத்துக்குடி-கொற்கை 27கிமீ. திருச்செந்தூர்-கொற்கை 23கிமீ.

ஊரின் நட்ட நடுவே பஞ்சாயத்து அலுவலகம். அருகே தொல்பொருள் காப்பகக் கட்டிடம் வாயிலில் பூட்டோடு.. உள்ளே ஒன்றுமில்லை. உள்ளே வைக்கப்பட்டிருந்த தொல்பொருட்கள் சென்னைக்கும் பாளையங்கோட்டைக்கும் கொண்டுபோக ப்பட்டன எனச் சொல்கிறார்கள். ஆனாலும், கட்டிடம் எங்கேயும் போய்விடாமல் இருக்கத்தான் அந்தப் பூட்டு.

இதன் மேற்புறம் வியப்பின் குறியீடாய் ஒரு வன்னிமரம்!
2000 ஆண்டுகளைக் கண்ட மரம். வங்காள விரிகுடாக் கடலையும், தாமிரபரணி ஆற்றையும் அருகிருந்து பார்த்த மரம். இப்போது, சுற்றுச் சுவருக்குள் முடங்கி, மண்ணில் கிடந்த நிலையிலும் பெருமையில் உயர்வாக, இப்போதும் தளிர் விட்டுக்கொண்டு, வியப்பின் வியப்பு இந்த வன்னி மரம்!

மரத்தின் அருகில் ஒரு நடுகல், பொற்கை பாண்டியன் வணங்கிய 'ஆஞ்சநேய மூர்த்தி' எனும் நாமத்தோடு உள்ளது.  'ஸ்ரீராமஜெயம்' காகிதம் சுருட்டிய மாலை ஒன்று இடப்பட்டிருந்தது. தேர்வு நேரம். ஆஞ்சநேயர் உதவுவாராக! மாணவர்/மாணவி அதிக மதிப்பெண் எடுக்க வாழ்த்துகள்!

ஆஞ்சநேயர் நடுகல்லின் பின்புறம் திரிசூலக் குறி! உள்ளது. பொற்கைபாண்டியனின் காலம் கிபி.2ஆம் நூற்றாண்டு. சூலக்குறி கற்களின் காலம் மிகப் பிந்தையது. அதனால் ஆஞ்சநேய மூர்த்தி நடுகல்லின் காலக் கணிப்பில் ஐயம் தோன்றுகிறது! 

தமிழகத்தில் தனி நடுகல் ஆஞ்சநேயர் வழிபாடு என்பது விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் தொடங்கியது. குறிப்பாக, கிருஷ்ணதேவராயரின் (கிபி1509-1529)  தலைமைக் குருவாகிய வியாசராயர்தான் இதுபோன்ற சிற்பங்களை தமிழகத்தில் அறிமுகம் செய்தார் எனலாம். இவர் இந்தியா முழுவதும் 732 எண்ணம் இதுபோல் சிற்பங்களை வைத்ததாகக் கூறுவர்.
"தலைக்குமேல் உயர்ந்த அனுமனின் வால், ஆசி வழங்குவதற்காக உயர்ந்த வலது கரம், தொடையின்மேல் இடது கரம், இடது கரத்தில் சௌகந்தி மலர், உயர்ந்து நிற்கும் வாலில் கட்டப்பட்ட ஒரு மணி", இவையே வியாசராயர் செய்து வைத்த அனுமர் அமைப்பு. அறிஞர்கள் மேலாய்வு செய்து விளக்கம் கூற வேண்டுகிறேன்.

'கொற்கை சிற்றூரின் வடக்கே 250 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் குளம். குளத்தின் மத்தியில் 'கண்ணகி கோயில்' . பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியன் வணங்கி நின்ற கோயில்! அதனால் அதன் பெயர் 'வெற்றிவேல் அம்மன் ஆலயம்' என வழங்கப் பெறுகிறது. பழைய கண்ணகி சிலை சிதைவுபட்டதால் புது சிலை 2015 குடமுழுக்கின்போது வைக்கப்பட்டுள்ளது. எட்டுக் கரங்களுடன், முகத்தில் கனிவுடன் காளிதேவி!

இந்த இடம்தான் கொற்கை துறைமுக வாயில் எனலாம்.  பெரும் நாவாய்கள் வந்து வாணிகப் பொருட்களை இறக்கவும் ஏற்றவும் செய்த இடமும் இதுவே. இப்போது  கடலும் இல்லை. அருகில் ஓடிய தண்பொருநை ஆற்றையும் காணவில்லை. இலக்கியச் சான்றுகளைக் காணும்போது, பொருநை ஆறு கொற்கையை ஒட்டி, அதன் வடபுறத்தில் ஓடியுள்ளது.எனத் தெரிகிறது. இப்போது, 3கிமீ தொலைவில் தெற்கே ஓடுகிறது.

2000 ஆண்டுக் காலம், கடலையும் ஆற்றையும் கொற்கையிடமிருந்து தொலைவில் பிரித்து வைத்துவிட்டது. குளக்கரையில் ஒரு தோரணவளைவு: 'பாண்டியரின் தொன்மைத் துறைமுகம்' என்று நம்மை வரவேற்கிறது. 


கண்ணகி கோயிலின் எதிரேயுள்ள பெரிய குளத்தையே கடலாகக் கொண்டு வரலாற்றைப் பின் நோக்கி அசை போட்டது மனது. எத்துணை பேர்பெற்ற இடம் இது. கடல் அத்தனையிலும் நாவாய் செலுத்தி "கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்" எனத் திரைகடல் ஓடி வாணிகம் செய்து வண்பொருள் ஈட்டிய, "எம் தமிழனே, நீ வாழி! வாயிலோன் வாழி! எம் கொற்கை வேந்தே வாழி’  எனச் சிலம்பு சொன்னதை வழிமொழிந்து நின்றேன்.

குளத்தின் மேற்குக் கரையில் 100அடி தூரம் நடந்தால், மிகப்பழைமையான பிள்ளையார் கோயில். வாழைத்தோப்பின் நடுவே, ஏகப்பட்ட புதர்களுக்கு மத்தியில் உள்ளது.இடம் அச்சமூட்டும் வகையில் உள்ளது. மனவலிமையுள்ள பிள்ளையார்! தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டு எழுத்துகள் முன்பக்கச் சுவற்றில் உள்ளது.யாரும் வாசித்து விடக்கூடாது என்ற அக்கறையில் எழுத்துகளின்மேல் கெட்டியான மஞ்சள் சாந்து பூசிவிட்டனர். கோயில், கிபி ஏழாம் நூற்றாண்டில் வளர்மாற்றம் பெற்றிருக்கும் எனத் தோன்றுகிறது.

இன்னும் சற்று வடக்கே நடந்தால் 'அக்கசாலைத் தெரு' என்ற பெயர்ப்பலகை நம்மை வரவேற்கிறது. குளத்தின் வடகரையில் முழு நீளத்துக்கும் வலிய கவர்ந்து நிற்கும் 'பாண்டிய நாணய சாலை'. இருந்த இடம். இப்போதும் பொற்கொல்லர் தெருவாக உள்ளது. கடலோடி வாணிகம் செய்த தமிழருக்குப் பொற்காசுகள் உருவாக்கித் தந்த இடம் இது! இங்கே கிடைத்த காசுகளில் 'வெற்றிவேல் செழியன்' எனும் தமிழ் வட்டெழுத்து உள்ளது.

நான் எதிலும் தாமதம்தான். எனக்கு எந்தக் காசும் கிடைக்கவில்லை. ஆயினும், சொக்கா! இக்கட்டுரையை வாசித்த அத்தனை பேருக்கும் ஆயிரம் 'செழியன் பொற்காசு' கொடுத்துவிடு!

அகழாய்வுகள்:

கொற்கையில் எங்கே தோண்டினாலும் கடற்சிப்பிகள், சங்குகள் கிடைக்கின்றன, ஒரு காலத்தில் இங்கே சங்கில் அலங்காரப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலை இருந்திருக்க கூடும் என்கிறார்கள், அக்கசாலை எனப்படும் பண்டைய நாணயச்சாலை, அங்கேயிருந்திருக்கிறது, அக்கசாலை ஈசுவரமுடையார் எனும் கோயில்தான் குளத்தின் மேற்குக் கரையில், புதர்களுக்கு இடையில் நாம் பார்த்த பிள்ளையார் கோயில்.

கொற்கை இடைச்சங்க சங்க காலம் தொட்டே ஒரு துறைமுகப் பட்டினமாய் இருந்து வந்தது. இதன் பழைமையை அறிய தமிழ் நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 1968, 1969களில் இவ்விடத்தில் 12 அகழாய்வு குழிகள் இட்டனர். அதன்மூலம் கி.மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்துள்ளன. 

மேலும் இங்கு தமிழி எழுத்துக்கள் பொறித்த பானையோடு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்தே அசோகப் பிராமியின்(கிமு.300) முன்னோடி.  எமது தமிழ் மூத்தது, முந்தையது. அதனால், அசோகப் பிராமியை 'அசோகத் தமிழி' என வகைப்படுத்துவதே சரி!. 

இறுதியாக, ஆனால் உறுதியாகப் பண்டைத்தமிழரின் பெருமைகளை விரித்துரைக்க உதவிய  கொற்கை அகழாய்வுகள் தமிழ் எழுத்து வளர்ச்சியினை அறிய உதவும்  ஒரு திருப்புமுனையாகவும் இருக்கிறது என்பதே கொற்கையின் பெருமை எனக் கூறி அமைகிறேன்.

Monday, March 19, 2018

சிதறால்

சிதறால் சமணக்கோயில் - சில படங்கள்

தமிழகத்தில் சமணம் - 2

தமிழகத்தில் சமணம் - 2

திருச்சாரணத்து மலை:

சிதறால் சிற்றூரை ஒட்டிய 'தேரி' என்று சொல்லப்படும் குன்று மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமே. அத்தொடரின் ஒரு பகுதியாகத்தான் 'திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைக்கட்டுகள் ஆகியன மிக அண்மையில் உள்ளன. பின்னர், மனம் கொஞ்சும் அழகுக்குக் கேட்கவா வேண்டும். மனம் மோனநிலைக்குச் செல்வதை யார் தடுக்க முடியும். உண்மையில் துறவிகளே இவ்வுலகில், இயற்கையில், அதன் அழகில் இன்புற்று வாழ்ந்தவர்கள்.

அடுக்கடுக்கான மலைகள், மேனி தழுவிச் சீராட்டும் தென்றல், மூலிகை வாசம் கலந்த காற்று, இவற்றுடன் மலை உச்சியில் நிற்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி, இவற்றையெல்லாம் சொற்களில் அடைத்திடவா முடியும்.
வெயில் கொளுத்தும் கோடையில் குளிர்ச்சி,  விடாத மழையிலிருந்து பாதுகாப்பு, குளிருக்கு இதம், என மலைக் குகைகள் என்ன மாயம்தான் செய்யவில்லை. ஆதிமனிதனின் முதல் குடியிருப்பு. அதுவே என்றென்றைக்கும் மனிதனின் உயர்ந்த இருப்பு!

கோயில் அமைப்பு:

மேற்கு நோக்கிய மூன்று கருவறைகள். நடுவில் மகாவீரர். வலப்பக்கம் பார்சுவநாதர். இடப்பக்கம் பத்மாவதி துறவியார் திருவுருவம் அகற்றப்பட்டு பகவதியம்மை. திருமேனி வைக்கப்பட்டுள்ளது. கிபி.12ஆம் நூற்றாண்டில் உதய மார்த்தாண்ட வர்மா காலத்தில் இது இந்துக் கோயிலாக மாற்றம் பெற்றது, ஆனால்,பத்மாவதி சிலை மாற்றம் தவிர வேறு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

பகவதியம்மைக்கு மட்டும். மின்விளக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மகாவீரர், பார்சுவநாதர் கருவறைகள் மற்றும் முன் மண்டபம் அனைத்தும் இருட்டில் உள்ளன. ஒருவேளை, ஒருவிளக்குத் திட்டத்தின்கீழ் மின்சாரம் வழங்கியிருப்பார்களோ என்னவோ; ஒரு விளக்கு குடிசைபோல இது ஒரு விளக்கு கோயில்! கூடுதலாக மூன்று மின் விளக்குகள் பொருத்த என்ன தடையெனத் தெரியவில்லை.

எங்கும் இருட்டு. மகாவீரரின் கருவறையின் உள்ளே  வடபக்கச் சுவற்றில் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும் கல் பலகையில் ஐந்து ஆறு வரிகளாக எழுத்து தெரிகிறது; வாசிக்க இயலவில்லை. அதுபோல், பார்சுவநாதர் சிலையின் பின்பக்கச் சுவற்றில் சுதை ஓவியங்கள்(fresco) பல இருப்பதாகத் தோன்றுகிறது. மனமகிழ்வோடு பார்க்க இயலவில்லை. தொல்லிலாகா மனது வைத்துத் தேவையானபோது மட்டுமே பயன்படுத்தும் வகையில் மின்விளக்கு வசதி செய்யவேண்டும்.
கருவறைகள் மட்டுமே குடைவரை. அதற்கு முன்னர், செங்கல்லினால் கட்டப்பெற்ற கோயிலொன்று கோயிலின் மலைமுகட்டில் இருந்திருக்க வேண்டும். இப்போது அந்த இடத்தில் செங்கல்லினால் எழுப்பப் பெற்ற அழகிய விமானம் உள்ளது. பழைய செங்கல் அடித்தளம் இன்றும் விமானத்தின் அருகே காணக் கிடைக்கிறது.

மலைமுகட்டில் விமானத்தின் முன்புறம் தற்போது பெரிய ஆலமரம் உள்ள சமமான பகுதியே மாணாக்கர் பயிலும் இடமாக இருந்திருக்க வேண்டும்.  விமானத்தின் நேர்கீழே மலையைக் குடைந்து மூன்று கருவறைகள் கிபி.5 - 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. அதனை ஒட்டி, முன்புறம் விரிந்து பரந்த மண்டபம் கிபி.12ஆம் நூற்றாண்டின் பிற்சேர்க்கை; கற்களால் கட்டப் பெற்றது. மண்டபத்தின் முன்புறம் திறந்தவெளி முற்றமும் பலிபீடமும்.
கோயிலின் வடபுறச் சுவற்றின் வெளிப்பக்கம் செதுக்கி வைத்த மகாவீரர், பார்சுவநாதர், பத்மாவதி, திருத்தங்கர்கள் மற்றும் அடியார்களின் மிக அழகிய புடைச் சிற்பங்கள் (bas relief) உள்ளன. பிற்காலத்தில், கிபி.7ஆம் நூற்றாண்டிற்குப் பின், செதுக்கப் பட்டிருக்க வேண்டும். கருவறைச் சிற்பங்களைவிட மிக நேர்த்தியாக உள்ளன.

கல்வெட்டு எழுத்துகள்:

கோயிலின் வெளியே தென்பக்கத்தில்  சமையற்கூடம் மற்றும் ஒரு சீரான புல்தரை உள்ளது.  புல்தரையைச் சுற்றிச் சூழ்ந்த பாறைகளின் அரவணைப்பு, அந்த இடத்தை அழகிய பூங்காவாகத் தோற்றுவிக்கிறது.
புல்தரையின் தென்பக்கம், 12×12அடி அளவில், கற்பாறை சீராகச் சமமாக்கப்பட்டு தமிழ் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, பாரிய தொலைக்காட்சிப் பெட்டி போன்று உள்ளது.

இது, விக்கிரமாதித்திய வரகுணப் பாண்டியனின் 28வது ஆட்சியாண்டுக் காலத் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டாக உள்ளது. இம்மன்னனின் வரலாறு எதுவும் கிடைக்கவில்லை. கல்வெட்டில், முத்துவாள நாராயணக் குரத்தியார் எனும் சமணசமயப் பெண் துறவி விளக்கு ஒன்றும் பொன்மலரும் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவரே கல்வெட்டை எழுதுவித்ததாகவும் உள்ளது.

பேராயிற்குடி அசிட்டநேமி பட்டாரகரின் சீடையாகிய குணந்தகி குரத்திகள் பொன் அணிகலன்கள் வழங்கியதாகவும் எழுதப் பட்டுள்ளது. (இங்கிருந்து நேர்கிழக்கில், அழகியபாண்டிபுரம் அருகே 'குறத்தியறை' எனும் ஊர் உள்ளது கவனிக்கத் தக்கது. அறை=பாறை; குரத்திப்பாறை, குறத்தியறையாக வழக்கில் வந்திருக்கலாம்). இருவரும் ஒருவரா வேறானவர்களா என்பது ஆராயத் தக்கது.அந்தப் பெண்துறவியின் மக்களுக்கு இங்கே சமயப் பாடம் பயிற்றுவிக்கப்பட்டதும், பெண் துறவி சமயப் பணி ஆற்றியதும் மேலும் தெரிய வரும் செய்திகளாகும்.

சிதறால் சமணக் கோயிலுடன் இணைந்து சமண சமயப் பள்ளி ஒன்று சீரான முறையில் இயங்கியுள்ளது. மாணாக்கர்கள் இங்குத் தங்கியிருந்து சமயக் கல்வி பயின்றுள்ளனர். முன்னர்க் குறிப்பிட்ட பெண் துறவி வழங்கிய கொடைகள் சமயக் கல்விக்காக எனவும் அறிய முடிகிறது.
கருவறையின் முன்பு உள்ள மண்டபத்தில் கிபி 12ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில்,  பகவதி அம்மன் வழிபாட்டுக்காக நாராயணன் அப்பல்லவராயன் பணம் கொடுத்தது குறித்து தமிழ் வட்டெழுத்தில் எழுதப் பட்டுள்ளது.

சமண வீழ்ச்சி:

பெரும்பேருடனும் புகழுடனும் விளங்கிய சமண மதம், கிபி.7ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்றெழுந்த இந்துமதப் 'பக்தி' இயக்கம் காரணமாகத் தமிழகமெங்கும் வீழத் தலைப்பட்டாலும், தென்தமிழக நாஞ்சில் பகுதியில் கிபி.12ஆம் நூற்றாண்டு வரை விளக்கமுடன் திகழ்ந்தது என உறுதியாகக் கூறலாம். சிதறால் சமணக் கோயில் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். கிபி.12ஆம்நூற்றாண்டில் மக்கள் விருப்பத்தை ஏற்று, உதய மார்த்தாண்ட அரசர், பத்மாவதி திருத்தங்கரரின் சிலையை அகற்றிவிட்டுப் பகவதியம்மையின் திருமேனி வைத்த நிகழ்வோடு சமண மதமும் இப்பகுதியிலிருந்து  நிறைவு பெற்று விலகியது எனக் கொள்ளலாம்.

தமிழகத்தில் சமணம் - 1

தமிழகத்தில் சமணம் - 1

சமண மதத்தில் ரிசபநாதர்(ஆதிநாதர்) முதல் மகாவீரர் வரையிலான 24 திருத்தங்கரர்களின் வரிசை கற்பிக்கப் படுகிறது. இவர்களுள், 23ஆம் திருத்தங்கரராகிய பார்சுவ நாதரே (கிமு.817 - கிமு.717) சமணக் கொள்கைகளை வரையறுத்தார் என்றும், அவருக்குப் பின் வந்த 24ஆம் திருத்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் (கிமு.599 - கிமு.527) அக்கொள்கைகளைச் சீரமைத்தார் எனவும் கூறுவர்.

புத்தமதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் வர்த்தமான மகாவீரர் காலத்தவர்களே. இவர்களுள் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலியும் மகாவீரரும் ஆறு ஆண்டுகள் ஒருங்கிருந்தனர். பிறகு மகாவீரருடன் மாறுபட்டு மற்கலி ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தை உண்டாக்கினார். இதனால், புத்தமதமும் ஆசிவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகின்றன.

மகாவீரருக்குப் பின் பலர் தலைமை யேற்று சமணமதத்தை வழிநடத்தினர். அவர்களுள், பத்திரபாகு (கிமு 327 - கிமு.297) காலத்தில்தான் தமிழகத்தில் சமணமதம் பரவியதாகக் கூறுவர்.

பத்திரபாகு, சந்திரகுப்த மௌரிய அரசனின் ஆசிரியராகவும் இருந்தார். சந்திரகுப்தரும் பத்திரபாகுவும் தங்களுடைய இறுதிக் காலத்தில் தென்னகத்துக்குப் பயணம் செய்து சிரவணபெளகொளாவில் தென்னிந்தியக் கிளையின் தலைமையிடத்தைத் தொடங்கி வைத்தனர். இருவரும் தங்கள் இறுதிக் காலத்தை இங்கேயே முடித்துக் கொண்டனர். பத்திரபாகுவின் முதன்மைச் சீடருள் ஒருவராகிய விசாகமுனிவர்தாம் தமிழகத்தில் சமண மதத்தைப் பரப்பினார்.

சமண மதம் கிமு 3ஆம்நூற்றாண்டிலேயே தமிழகத்தில் தளைத்து வளரத் தொடங்கியது. அந்நேரம், புத்தமதத்தின் செல்வாக்கு காரணமாகச் சமணமதம் வட இந்தியாவில் தொய்வு பெறத் தொடங்கியது.விசாக முனிவர் தமிழகத்தின் பல இடங்களிலும் சமணப் பள்ளிகளை உருவாக்கினார். அப்பள்ளிகளுள் ஒன்றுதான் சிதறாலில் உள்ள திருச்சாரணத்து மலை. ஷ்ராவணம் - சாரணம் என்பது சமணத்தின் வடமொழிப் பெயரே. திருச்சாரணரது மலையே மக்கள் வழக்கில் திருச்சாரணத்து மலையாக அறியப்பட்டிருக்க வேண்டும்.

சிதறால்:

கன்னியாகுமரி மாவட்டம், சிதறால் எனும் சிற்றூருக்குச் சற்று மேற்கே கவினுறக் காட்சி தரும்  திருச்சாரணாத்து மலையில் அழகிய சமணக் குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது.  இதனை உள்ளூர் மக்கள் 'மலைக்கோயில்' என்றே அழைக்கின்றனர்.

முன்னரே தமிழகத்தில் மேம்போக்காக அறிமுகமாகியிருந்தாலும், கிமு.3ஆம் நூற்றாண்டில் விசாகமுனிவர்தாம் பல இடங்களில் சமணப்பள்ளி ஏற்படுத்தி சமணத்தைச் சீராக வளர்த்தவர் எனலாம். அவ்வாறு, கிமு 1ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்து, இந்தியாவின் தென்முனையில்  நன்கு பரவி நின்ற சமணமதத்தின்  அடையாளமே இக்கோயில். கிமு 1 முதல் கிபி12ஆம் நூற்றாண்டு வரை பல கட்டங்களாக, அழகாக, நுணுக்கமாகச் செதுக்கப் பெற்ற கலைச் சிற்பங்கள், சுதை ஓவியங்கள்,  குடைவரைக் கோயில் எனக் கண்கொள்ளாக் காட்சியாக விரியும் கலைப் படைப்பு இது.

நாகர்கோவில் - மார்த்தாண்டம் - பயணம்(ஊரின் பெயர்தான்) - ஆத்தூர்.- ஆத்தூரிலிருந்து இடப்பக்கமாக அருமனை செல்லும் வழியில் சிதறால் உள்ளது. மொத்தம் 45 கிமீ தூரம். வாருங்கள்! பார்ப்போம்.

(அடுத்து:  சிதறால் சமண சமயக் கோயில் குறித்த பதிவு )

Saturday, March 17, 2018

தமிழகத்தில் சமணம்

தென்கோடித் தமிழகத்தில் சமணமதம் - 1

சமண மதத்தில் ரிசபநாதர்(ஆதிநாதர்) முதல் மகாவீரர் வரையிலான 24 திருத்தங்கரர்களின் வரிசை கற்பிக்கப் படுகிறது. இவர்களுள், 23ஆம் திருத்தங்கரராகிய பார்சுவ நாதரே (கிமு.817 - கிமு.717) சமணக் கொள்கைகளை வரையறுத்தார் என்றும், அவருக்குப் பின் வந்த 24ஆம் திருத்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் (கிமு.599 - கிமு.527) அக்கொள்கைகளைச் சீரமைத்தார் எனவும் கூறுவர்.

புத்தமதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் வர்த்தமான மகாவீரர் காலத்தவர்களே. இவர்களுள் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலியும் மகாவீரரும் ஆறு ஆண்டுகள் ஒருங்கிருந்தனர். பிறகு மகாவீரருடன் மாறுபட்டு மற்கலி ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தை உண்டாக்கினார். இதனால், புத்தமதமும் ஆசிவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகின்றன.

மகாவீரருக்குப் பின் பலர் தலைமை யேற்று சமணமதத்தை வழிநடத்தினர். அவர்களுள், பத்திரபாகு (கிமு 327 - கிமு.297) காலத்தில்தான் தமிழகத்தில் சமணமதம் பரவியதாகக் கூறுவர்.

பத்திரபாகு, சந்திரகுப்த மௌரிய அரசனின் ஆசிரியராகவும் இருந்தார். சந்திரகுப்தரும் பத்திரபாகுவும் தங்களுடைய இறுதிக் காலத்தில் தென்னகத்துக்குப் பயணம் செய்து சிரவணபெளகொளாவில் தென்னிந்தியக் கிளையின் தலைமையிடத்தைத் தொடங்கி வைத்தனர். இருவரும் தங்கள் இறுதிக் காலத்தை இங்கேயே முடித்துக் கொண்டனர். பத்திரபாகுவின் முதன்மைச் சீடருள் ஒருவராகிய விசாகமுனிவர்தாம் தமிழகத்தில் சமண மதத்தைப் பரப்பினார்.

சமண மதம் கிமு 3ஆம்நூற்றாண்டிலேயே தமிழகத்தில் தளைத்து வளரத் தொடங்கியது. அந்நேரம், புத்தமதத்தின் செல்வாக்கு காரணமாகச் சமணமதம் வட இந்தியாவில் தொய்வு பெறத் தொடங்கியது.விசாக முனிவர் தமிழகத்தின் பல இடங்களிலும் சமணப் பள்ளிகளை உருவாக்கினார். அப்பள்ளிகளுள் ஒன்றுதான் சிதறாலில் உள்ள திருச்சாரணத்து மலை. ஷ்ராவணம் - சாரணம் என்பது சமணத்தின் வடமொழிப் பெயரே. திருச்சாரணரது மலையே மக்கள் வழக்கில் திருச்சாரணத்து மலையாக அறியப்பட்டிருக்க வேண்டும்.

சிதறால்:
கன்னியாகுமரி மாவட்டம், சிதறால் எனும் சிற்றூருக்குச் சற்று மேற்கே கவினுறக் காட்சி தரும்  திருச்சாரணாத்து மலையில் அழகிய சமணக் குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது.  இதனை உள்ளூர் மக்கள் 'மலைக்கோயில்' என்றே அழைக்கின்றனர்.

முன்னரே தமிழகத்தில் மேம்போக்காக அறிமுகமாகியிருந்தாலும், கிமு.3ஆம் நூற்றாண்டில் விசாகமுனிவர்தாம் பல இடங்களில் சமணப்பள்ளி ஏற்படுத்தி சமணத்தைச் சீராக வளர்த்தவர் எனலாம். அவ்வாறு, கிமு 1ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்து, இந்தியாவின் தென்முனையில்  நன்கு பரவி நின்ற சமணமதத்தின்  அடையாளமே இக்கோயில். கிமு 1 முதல் கிபி12ஆம் நூற்றாண்டு வரை பல கட்டங்களாக, அழகாக, நுணுக்கமாகச் செதுக்கப் பெற்ற கலைச் சிற்பங்கள், சுதை ஓவியங்கள்,  குடைவரைக் கோயில் எனக் கண்கொள்ளாக் காட்சியாக விரியும் கலைப் படைப்பு இது.

நாகர்கோவில் - மார்த்தாண்டம் - பயணம்(ஊரின் பெயர்தான்) - ஆத்தூர்.- ஆத்தூரிலிருந்து இடப்பக்கமாக அருமனை செல்லும் வழியில் சிதறால் உள்ளது. மொத்தம் 45 கிமீ தூரம். வாருங்கள்! பார்ப்போம்.

(அடுத்து:  சிதறால் சமண சமயக் கோயில் குறித்த பதிவு )

Monday, March 12, 2018

தமிழகத்தில் ஆசீவகம்


ஆசீவகம்:

ஆசீவகம் என்பது மெய்யியல் நெறி. அஃது ஓர் அறிவியல் மரபு; "வைதிகநெறி" எனும் விதிக் கொள்கைக்கு எதிரான வாழ்க்கை முறை. குறிப்பாக, கிமு 600 முதல் கிபி 250 வரை தமிழ் மக்களின் பேரியக்கமாகத் தழைத்தோங்கி வாழ்ந்த ஒரு சமய நெறி.


அருகமும் ஆசீவகமும்:

சமணமதம், 'அருகம்' என்று அழைக்கப்படுகிறது. மகாவீரர் எனும் அருக முனிவரின் போதனைகளைப் பின்பற்றுபவர் அருகநெறியாளர் என்பர். "ஜைனம்" என்பது சமணத்தின் வடசொல் வழக்கு.
அமணமதம், 'ஆசீவகம்' என்று அழைக்கப்பெறும். தோற்றுவித்தவர் மற்கலி. இவர் 'மற்கலிகோசாளர்'/'மக்கலிகோசாலர்' என்று வடநாட்டில் அழைக்கப்படுகிறார்.ஆசீவகம் வடமொழியில் 'ஆஜீவிகா' என அழைக்கப்படுகிறது.

திருத்தங்கரர் (தீர்த்தங்கரர்) மரபு:

அருகம், ஆசீவகம் இரண்டனுக்கும் திருத்தங்கரர்களே அடிப்படை மரபு. ஆதிநாதர்(ரிஷப தேவர்) முதலாக மகாவீரர் இறுதியாக 24 திருத்தங்கரர்கள் அருளிய கொள்கை நெறிகளே சமணர் வாழ்க்கை மரபு.ஆதிநாதர், பார்சுவ நாதர் ஆகிய திருத்தங்கரர்களை ஆசீவகமும் போற்றி வழிபடுகிறது. ஆனால், மகாவீரரின் போதனைகளில் மாற்றம் தெரிவிப்பதே ஆசீவகம். ஆசீவகம் தோற்றுவித்த மற்கலி, மகாவீரர் காலத்தவர். காலம் கிமு.6ஆம் நூற்றாண்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்ததாகவும் கூறுவர்.

பிடவூர்ப் பெருஞ்சாத்தன்:

"செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்
அறப்பெயர் சாத்தன் கிளையேம் பெரும"
எனும் புறநானூற்றுப் பாடல்,. சோழநாட்டுப் பிடவூர்க் கிழானின் மகன் பெருஞ்சாத்தன் திருப்பிடவூர் எனும் திருப்பட்டூரில் வாழ்ந்ததாகக் கூறுகிறது.. சாத்தன் எனும் சொல் தமிழ்வழக்கில் ஐயனார் என்றே அறியப்படுகிறது. 


சாத்து என்றால் கூட்டம் என்று பொருள். பொதுவாக, வணிகக் கூட்டங்களை சாத்து என்று அழைப்பர். வணிகக் கூட்டங்களின் காவல் தெய்வமாக விளங்கிய ஐயனார்க்குச் சாத்தன் எனும் பெயர் வழக்காயிற்று. வணிகக் கூட்டங்களின் தலைவனும் சாத்தன் என்றே அழைக்கப்பெறுகிறான்.

ஐயனாரே மற்கலி:

திருப்பட்டூர் என்று அழைக்கப்பெறும் திருப்பிடவூர், திருச்சி-பெரம்பலூர் சாலை வழியில் உள்ளது. இங்கே ஐயனார் கோயில் உள்ளது. ஐயனார் வழக்கமாக இடங்கையில் வைத்திருக்கும் செண்டுக்குப் பதிலாக, இங்கே, குட்டையான ஓலைச் சுவடியை வைத்திருக்கிறார்.


"கயிலையிற் கேட்டமா சாத்தனார் தரித்தந்தப் பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில்" என்று பெரியபுராணம் உரைக்கும் 'திருப்பிடவூர் பெருஞ்சாத்தன்' இவரே. 'கயிலையில் ஆதிநாதரிடமிருந்து 'ஆதி உலா' நூலைப் பெற்று வந்தவர் 'திருப்பிடவூர் பெருஞ்சாத்தன்' என்பது பெரியபுராணச் செய்தி. ஆதிநாதர் என்பவர் 'ரிஷப தேவர்' எனும் முதல் சமண-அமணத் திருத்தங்கரர் ஆவார். ஆதிநாதரிடம் பெற்ற மெய்யியல் கோட்பாட்டையே இந்நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. ஆதி உலா என்பது மற்கலி எழுதிய 'ஒன்பதாம் கதிர்' எனும் நூல் என்ற ஐயப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டியிருக்கிறது.


பொதுவாக ஐயனார் கோயிலில் கல்வெட்டு இருப்பதில்லை. ஆனால், இக்கோயிலில் கல்வெட்டு உள்ளது. அதில்,
"திருமண்டப முடையார் கோயிலிற் கூத்தாடுந் தேவர்க்கு" எனும் வரிகளில், 'கூத்தாடும் தேவர்' எனும் வரிகள் நோக்கத் தக்கனவாகும். எனில், மற்கலியின் இறுதிப் பெருநடனமே இதன் பொருளாகும் எனவாம்.
ஆசீவகத் தலைவர் பூரணரை உறையூரில் கண்டு சமய வழக்காடியதாக நீலகேசி உரைப்பது, திருப்பிடவூர், உறையூர், ஆசீவகம் இவற்றுக்கு இடையேயான உறவை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் கொள்ளலாம்.
ஆக, பிடவூர்ப் பெருஞ்சாத்தன் எனும் ஐயனாரே மற்கலி எனலாம்.

ஆசீவக மூவர்:

அருகம், ஆதிநாதர் முதலான 23ஆம் திருத்தங்கரரான பார்சுவநாதர் வரையிலானவர்களின் போதனைகளின் அடிப்படையில் மகாவீரர் போதித்த நெறிகளைப் பின்பற்றுஙிறது. மகாவீரரை 24வது திருத்தங்கரராகக் கொண்டாடுகிறது.
ஆசீவகம், பார்சுவநாதருக்குப் பின் மற்கலியைத் திருத்தங்கரராகக் கொண்டு, மற்கலியின் போதனைகளையே பின்பற்றுகிறது.

ஆசீவகத்தின் முப்பெரும் திருத்தங்கரர்கள்:

திருப்பிடவூர் ஐயனார்/மற்கலி கோசாலர்
மாங்குளம் நந்தாசிரியன்/நந்தவாச்சா
மறுகால்தலை கிசசாங்கிசா/வெண்காசியபன்
ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களாக மூவர் குறிக்கப்படுகின்றனர். அம் மூவர் ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி, கிசசாங்கிசா, நந்தவாச்சா என்போராவர். இம் மூவருள் மற்கலி கோசாலரைத் தவிர்த்த மற்ற இருவரைப் பற்றியும் பாலி, பாகதம் முதலான வட மொழிகளில் குறிப்புகள் கிடைக்கவில்லை.

நந்தவாச்சாவும் கிசசாங்கிசாவும்:

"கணிய் நந்த அஸிரிய் இகுவ்அன் கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன்
கடல்அன் வழுத்திய் கொட்டுபித்த அபளிஇய்"
"என கிமு 3ஆம் நூற்றாண்டு  மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் கணி நந்தாசிரியனே நந்தவாச்சா என பாலி மொழியில் குறிப்பிடப் படுகிறார்.. வானவியல் கணிப்பதில் வல்லவரான கணி நந்தாசிரியன் பேச்சு வழக்கில் நந்தவாச்சா ஆகியிருக்கிறார்.
ஆசிரியன் - ஆச்சாரியன் -ஆச்சான்
பெரியவாசிரியன் - பெரியவாச்சான்
நந்தாசிரியன் - நந்தவாச்சான் - நந்தவாச்சா
நந்தவாச்சாவைப் போலவே கிசசாங்கிசா என்பவரும் ஆசீவகத் துறவிகளுள் முதன்மையானவர்
"வெண்காசிபன் கொ(ட்)டுபித்த கல் கஞ்சணம்"
தூத்துக்குடி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலையில் ஆசீவகப் படுக்கை கண்டுபிடிக்கப்பட்டபோது காணப்பட்ட கிபி.2ஆம் நூற்றாண்டு 'தமிழி' எழுத்து இது.இந்த மறுகால்தலை கற்படுக்கைக்குரிய வெண்காசிபன் என்பவரே கிசசாங்கிசா.
இவ்விருவரையும் பௌத்த தமிழ் இலக்கியங்களிள்கூட  ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகப் போற்றுவதைக் காண்கிறோம். இம் மரபுக்கு ஏற்ப இவர்களைப் ‘பரம ஐயனார்’ என்று தமிழ் மக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர் என்பதும் வியப்பே.

தமிழர் அணுவியம் எனும் மெய்யியல் கோட்பாடு:

"ஆசிவகமானது பண்டைய தமிழர்களின் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்தது" என  அமெரிக்க இந்தியவியல் அராய்ச்சியாளர் அறிஞர் ஹென்ரிக் ராபர்ட் ஜிம்மர் தனது ;இந்திய தத்துவவியல்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
ஆசிவகம் மூன்று முக்கிய பகுதிகளை ஒன்றிணைப்பதாகும். அவை:- ‘அணுக்கொள்கையியல்’, அறிவியல் பூர்வமான ‘தர்க்கவியல்’, உலக நியதி எனப்படும் ‘ஊழியல்’ என்பனவாம்.

தமிழகத்தில் ஆசீவகம்:

மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர். அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல். பாசம்.கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர்.
தமிழரின் ஊனோடும் உயிரோடும் கலந்து நிற்கும் ஓர் அறிவியல் மரபே ஆசீவகம். புத்தரும், மகாவீரரும் பொறாமைப் படும் அளவிற்கு ஒரு காலத்தில் மக்கள் சமயமாகவும் இது திகழ்ந்துள்ளது. சங்க காலத் தமிழரின் வாழ்வியலாகவும் சமயமாகவும் கூட ஆசீவகம் திகழ்ந்துள்ளது. எவ்வளவோ இடர்ப்பாடுகளைக் கடந்தும் அது தன்னைக் காத்துக் கொண்டு இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.