அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, November 20, 2019

பெயர் வாங்கித் தந்தவன்

அவன்
வேறு யாருமில்லை
எனது
சட்டைப் பைக்குள்
வாசம் செய்யும்
தனிச் செயலன்;

அவனுக்கு
இவ்வுலக வேலை
எதுவுமில்லை
ஆனாலும்
என்னைப்
பெரிய ஆளாக்கிப்
பார்க்க வேண்டுமென்று
தீராத விருப்பம்!
அதனால் என்மீது
குறையுண்டு அவனுக்கு!

அவன்:
தமிழு தமிழுனு
படிக்கிறது என்னத்துக்கு?
போதும் ஐயா படிச்சது!
நாலு டாபிக்குல
நாலு சோக்கு அடிச்சமா
நாலுபேர் சிரிச்சாங்களா
பொழச்சமான்னு போங்க;
அவ்ளோதான் வாழ்க்க!

... இவ்வளவு சொல்லியும்
... அங்க என்ன பண்றீங்க,
அது என்ன டுவீட்டா?

நான்:
இல்லை,
இதுபேர் கீச்சு!

அவன்:
தெரியும்... தெரியும்...
ட்வீட்டுன்னு சொன்னா
வாய் கொறஞ்சி போகாது
அத எங்கிட்ட உடுங்க
இன்னைக்கு மட்டும்
நான் போடுறேன் ட்வீட்டு
அப்புறம்
லைக் எத்தனை
ரீட்வீட் எத்தனை
நீங்களே பாருங்க!

நான் :
டேய்.. டேய்..
என் கைபேசிய எடுக்காதே

அவன் :
... இந்தா புடிங்க
போட்டாச்சி ட்வீட்டு

ஐயாமார்களே!
சற்று நேரத்திற்குமுன்
போட்ட கீச்சு எனதில்லை!

என் செயலன்
என்னதான் போட்டிருப்பான்?
எட்டிப் பார்த்தால்...
அதற்குள்...
அந்தக் கீச்சிற்குக் கீழே
எட்டுத் தொடுப்பு!
பத்து விருப்பு!

இதுதான்
அவன் போட்டிருந்த கீச்சு,
"எந்த மரமானாலும்
காய்ச்சித் தொங்குகிற
எல்லாப் பழமும்
கொய்யாப் பழம்தான்"