அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, October 23, 2019

நிலா முகம்

நசைஇ பெருகிய ஒளிறுவா னிலவும்
வசையி லெழிலிய தன்னுரு மகிழ்ந்திட, வான்பொரு தேந்திய வளனெயி லடைஇய
தான்சிறை புக்கென வேண்டாவா மென்றிட, எய்தவு வந்ததெம் மில்லெனுங் குடிலே
எய்துப சிலைகொள் நீள்கோ டோட்டிட,
வீழ்ந்தது முன்றிற் கொட்டிற் கழுநீர்;

போழ்தெம் மேதியோ உறக்கம் நீங்கியே
மருங்குல் தணிப்பத் தன்வாய் வைத்திடக் கலங்கிய நீரினில் கலைந்திடு வுருகாண்
மருங்கி லோடி முகிழ்முகம் புதையி
வாழ்ந்தேம் நகையொடும் புத்தேள்
வாழ்ந்திடு மெந்தை யெந்தெய் வருளே!

பொருள் :
ஒளிதரும் வான் நிலவு குற்றமில்லாத தனது அழகிய உருவத்தைக் காண பெருகிய விருப்பம் கொண்டு, வானளாவிய கோட்டையுடைய அரண் போன்ற வீட்டிற்குச் சென்றால் சிறைபட நேருமென்று எண்ணி, சிறு குடிலாகிய எம் வீட்டில் உள்ள முற்றத்துக் கொட்டிலில் கழுநீர் கூடிய தொட்டியில் நெடுங்கோடு உடைய தன் ஒளியைப் பரப்பியது. அப்போது, எம் வீட்டு எருமை மாடு உறக்கம் நீங்கித் தனது தாகம் தீர்க்க வேண்டி அத் தொட்டியில் வாய் வைத்தது. அதுபோது கலங்கிய தன் முகம் கண்டு வருந்திய நிலவு மேகக் கூட்டத்தில் தன் முகத்தை மறைத்துக் கொண்டது. குடிசையில் வாழ்ந்தாலும் நாங்களும் நகை செய்து மகிழ்வுடன் வாழச் செய்தது இறைவன் அருளே!