அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, October 23, 2019

புத்தா!

புத்த தேவா
என்னை மன்னித்துவிடு!
ஒட்டி உலர்ந்த
உன் யாக்கை
எனக்கு வேண்டாம்.
எல்லோரும் எண்ணுகிறார்கள்
பசியின் ஆழ்ந்த மயக்கத்தில்
நீ பட்டறிவு பெற்றதாக;
நானறிவேன் அதை!
வெயிலில் வாடிக்
களைத்த உனக்கு
இதம் தந்ததே
அந்தப் போதிமரம்;
இதம் தந்த அறிவே
உனது புத்துயிர்ப்பு!

நீ புத்தனானது
போதிமரத்தால் அல்ல,
என்று நீ உன்
அரண்மனையின் இதம் நீங்கி
வெளிப் போந்தாயோ
அந்த நொடி...
ஓ கௌதமா
இல்லை இல்லை..
ஓ புத்ததேவா!

என்னை மன்னித்துவிடு!
ஒட்டி உலர்ந்த
உன் யாக்கை
எனக்கு வேண்டாம்!
என்னைப்போல் நீயும்
வறுமையில் வாழ்ந்திருந்தால்...
வெந்ததைத் தின்று
விதிவந்து செத்திருப்பாய்!
பசியில் பட்டறிவு
துளிர்க்கும் எனச் சொன்னது யார்? அரண்மணையின் இன்ப வாழ்வை
எனக்கும் தா!
அந்தத் துளிநேரத்தை...
நீ நீங்கிய போழ்தின்
ஆழ்ந்த அமைதியை...
நானும் பெறவேண்டும்!