அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Sunday, October 13, 2019

ஆலமரம்

போதகரின் வீடு!
தட்டினேன் திறக்கப்பட்டது
'கடவுளைக் காண வேண்டும்' நான்
'வலதுபக்கத் தெருவில்
கடைசியில் இருப்பது தேவாலயம்
பாதர் இருப்பார்
சென்று காத்திருங்கள்
சற்றுநேரத்தில் வருவேன்
நாம் பேசலாம்' என்றார்
காத்திருக்க நேரமில்லை
கிளம்பிவிட்டேன்.

இமாம் அவர்கள் வீடு!
பூட்டிய கதவில்
எட்டிப் பார்த்தது முகம்
'கடவுளைக் காண வேண்டும்' நான்
'தொழுகை நேரம் இது
செல்லுங்கள் பள்ளிக்கு
அத்தாவும் புறப்பட்டாச்சி
சல்லச் சொன்னாக'
பதில் வந்தது
காத்திருக்க நேரமில்லை
கிளம்பிவிட்டேன்

கிராமத்து எல்லை
களைப்பு நீக்கும் ஆலமரம்
பக்கத்தில் திருவோடு
படுத்திருந்தவன் பிச்சைக்காரன்
'கடவுளைக் காண வேண்டும்' நான்
'பார்த்துக் கொண்டிருக்கிறாய்' அவன்.

- எது? இந்த ஆலமரமா?
பதிலில்லை
- எதிரே காணும் காரிருளா?
பதிலில்லை
- எங்கும் பரவிய இப் பெருவெளியா?
பதிலில்லை
- போதகரும் இமாமும்...
"நிறுத்து! போதகர் பேசுவார்
பேச்சுதான் கடவுள் அவருக்கு!
இமாம் தொழுவார்
தொழுகையே கடவுள் அவருக்கு!"

- அப்படியானால், என்னை
இறையில்லம் ஏகச் சொன்ன
காரணம்?
"அங்கேதான் அவர்கள் உன்னைத் தன்வயப்படுத்த முடியும்"
- அப்படியானால், நீதான் கடவுளா?
"பைத்தியம்" என்று சொல்லித்
தூங்கிவிட்டான் பிச்சைக்காரன்!