அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Saturday, February 25, 2017

கொக்கென்று நினைத்தாயோ?

       ( கொச்சகக் கலிப்பா)

மருதநில உழவரெல்லாம்
     மழைகண்டு இன்பமுற
எருவதனை நிலத்திலிட்டு
     ஏரோட்டி விதைவிதைக்க
மருதநிலச் சிறுவரெலாம்
     வரப்பினிலே கூடிவர
அருள்வளரும் வேளாண்மை
     மகிழ்வோடு நடந்ததுவே!

உளைவாழ்ந்த நண்டொன்று
     குடுகுடென்று ஓடிவர
வளைபாந்தில் ஏதுமற்று
     எலிஉணவு தேடிவர
அளைபோந்த அரவமதும்
     ஆசையுடன் ஊர்ந்துவர
கிளைதாண்டி மயிலதுவும்
    குதித்தோடி வந்ததுவே!

குழிநண்டைக் கண்டஎலி
     கூர்பல்லால் கவ்விவர
வழிகண்டு கட்செவியும்
     எலியதனை வவ்விவர
விழிகொண்டு பார்த்தமயில்
     உரகமதைக் கொத்தியெழ
பழிகொண்டு வேளானும்
     மயில்கல் எறிந்தனனே!

தலைநேரே வந்தஇடர்
     தோகையொடு போனதென
நிலைமாறிப் பாம்பதனை
   பறக்கையிலே விட்டுவிட
பொத்தென்று விழுந்ததுவே
     பாம்புசிறு வன்தலையில்
நச்சென்று நண்டுவிழ
     எலிவிழுந்த தொருதலையில்  !

திண்ணென்று சிறுவருமே
     திடுக்கிட்டு ஓடைவிழ
கண்தூக்கம் கலைந்திட்ட
      கருமேதி நீரில்எழ
வன்முதுகின் மேலிருந்த
     கொக்கதுவும் பறந்துஎழ
கண்மயில்தான் சென்றவழி
     வெண்கொக்கும் பறந்ததுவே!

களப்பயிற்சிப் பெறவந்து
     கண்டுநின்ற மாணவரும்
களக்குறிப்பு நூலதனில்
     கச்சிதமாய் எழுதிநின்றார்
கொக்கென்றால் அச்சம்கொண்டு
      கானமயில் பறந்தோடும்'
அக்கறையாய் மாணவியர்
     அதுவும்தான் எழுதினரே!