அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Showing posts with label மருதம். Show all posts
Showing posts with label மருதம். Show all posts

Wednesday, March 1, 2017

இவனும் உழவனே!

கோட்டை விதைப்பாட்டில்
     ஏழுகடல் நீர்தளும்ப
எட்டுஊர்க் காளைகளும்
     ஏர்தாங்கி உழுதுவர
மட்டில்லாக் கானம்
     மருதக் குயில்பாட
பெட்டைமயில் ஆணுடனே
     தோகை விரித்தாட

விளைந்த நெல்மணிகள்
     கோபுரமாய்க் குவிந்துஎழ
ஓஹோ ஹோவென்று
     ஊரார் ஆர்ப்பரிக்க
தேவதைகள் வந்து
     தலைமேல் பூப்போட
தூக்கம் கலைந்து
     அண்ணாந்து பார்த்தால்

மருத இலை பறிக்கும் மந்திஒன்று பல்லிளிக்க
கனவெல்லாம் கலைந்து நினைவும் திரும்பியதே!

மேய்ச்சலுக்கு விட்டகாளை
     எங்கென்று கண்நோக்க
நட்டநடு வயலில்
     மேய்ச்சல் காளையது
இட்டம்போல் தலையாட்டி
     ஊரான் பயிர்மேய
ஓஹோஹோ எனக்கூறி
     வயல்காரன் கல்லெறியக்

களைபறிக்கும் பெண்டிரெல்லாம்
     கைகொட்டிக் கூச்சலிட;
காளையதும் ஓடியது;
     கட்டில்லாமல் ஓடியது!
உச்சைக்கு உறக்கம்
     உழவனுக்கு ஆகாதென்று,
உழவனும் ஓடிப்போனான்
   காளைசென்ற வழிதேடி!

மருதம் விளைந்தது

போகம் ஒன்று:

தென்மேற்கில் காற்றடித்துத்
     தேன்போல நீர்பெருகி
ஆற்றில் புதுவெள்ளம்
     ஆனந்தம் பாடிவர
மருதநிலப் பேருழவர்
     கருமார் களம் போந்தார்.

கொழுவைக் கூராக்கி
     மழுவைச் சீராக்கி
வீடுகொண்டு சேர்த்தனர்
     வாசல்நின்று பார்த்தனர்!
ஆடையின்றிச் சிறுவர்கள்
     ஆற்றினில் குதித்துஎழ;

குடுமுழுகிப் போச்சுதடா
     இடிவந்து விழுந்ததென
கெண்டைமீன் துள்ளியெழ
     கெழுத்திமீன் உளையில் புக
அயிரைமீன் சிலுசிலுக்க
     ஆரல்மீன் அடிபதுங்க
மலையிலே பிறந்தமழை
     மடுவெல்லாம் நிறைந்ததுவே!

மருதம் நனைஞ்சிருக்க
     மனதெல்லாம் நிறைந்திருக்கக்
கால்வரத்தைச் சீராக்கிக்
     கூவரத்தால் வயல்திருத்தி
கும்பிட்ட கையுடனே
     கூம்பாலை விதையெடுத்து
ஆடியிலே நெல்விதைத்து
     ஆவணியில் களைபறித்துப்
புரட்டாசிப் பூப்பூத்துப்
     பூரணமாய் நெல்விளைய
பரணிலே கொட்டிவைத்துக்
     குதிலிலே குலுக்கிவைத்துக்
கொல்லர்க்கும் நெல்அளந்தார்
     கூலிக்கும் நெல்அளந்தார்
தானமாய் நெல்அளந்தார்
     தவத்துக்கும் நெல்அளந்தார்
கதிர்மணியை உயர்த்திக்கட்டி
     குருவிக்கும் நெல்அளந்தார்
ஒருபோகம் நெல்விளைந்து
     மறுபோகம் காத்திருந்தார்!

போகம் இரண்டு:

வடகிழக்கில் இடிஇடித்து
     வட்டப்புயல் சுழன்றடித்து
ஐப்பசியில் பெய்தமழை
     கார்த்திகையில் குளிர்ந்ததுவே
ஆற்றுவெள்ளம் பெருகிவர
     அணைகொண்டுத் தடுத்துஎழ
கால்பிரிந்து இடம்வலமாய்
     கால்வாய்வழி ஓடியதே!

கரியொன்று மதங்கொண்டு
     கடைவாயில் நுரைதளும்பக்
கோட்டை அரண்மோதிக்
     கோவென்று விழுந்ததுபோல்
ஏரியென்றும் குளமென்றும்
     பேரிகைபோல் நீர்முழங்கிக்
கடல்போல் கடந்தவெள்ளம்
     கடைமடை அடைந்தபோது
அலைபோல் நுரைகொண்டு
     ஆர்ப்பரித்து எழும்பியதே!
மதகெல்லாம் திறந்திருக்க
     மறுகாலும் பாய்ந்திருக்க
வாய்க்கால் வழிஓடி
     வயலில்நீர் சேர்ந்ததுவே!

சடுதியிலே உழவுசெய்து
     சம்பாநெல் விதைவிதைத்துத்
தைத்திங்கள் நெல்அறுத்துத்
     தைப்பொங்கல் படையலிட்டு
உற்றதோழன் காளைக்கும்
     உவப்புடனே நாள்எடுத்து
வீடெல்லாம் நெல்நிறைய
     விவசாயி வாழ்ந்துநின்றார்!
உலகுய்ய ஊண்தந்து
     உழவரெல்லாம் உயர்ந்துநின்றார்!
கருணையோடு மழைதந்த
     காரணனைப் போற்றிநின்றார்!

Saturday, February 25, 2017

கொக்கென்று நினைத்தாயோ?

       ( கொச்சகக் கலிப்பா)

மருதநில உழவரெல்லாம்
     மழைகண்டு இன்பமுற
எருவதனை நிலத்திலிட்டு
     ஏரோட்டி விதைவிதைக்க
மருதநிலச் சிறுவரெலாம்
     வரப்பினிலே கூடிவர
அருள்வளரும் வேளாண்மை
     மகிழ்வோடு நடந்ததுவே!

உளைவாழ்ந்த நண்டொன்று
     குடுகுடென்று ஓடிவர
வளைபாந்தில் ஏதுமற்று
     எலிஉணவு தேடிவர
அளைபோந்த அரவமதும்
     ஆசையுடன் ஊர்ந்துவர
கிளைதாண்டி மயிலதுவும்
    குதித்தோடி வந்ததுவே!

குழிநண்டைக் கண்டஎலி
     கூர்பல்லால் கவ்விவர
வழிகண்டு கட்செவியும்
     எலியதனை வவ்விவர
விழிகொண்டு பார்த்தமயில்
     உரகமதைக் கொத்தியெழ
பழிகொண்டு வேளானும்
     மயில்கல் எறிந்தனனே!

தலைநேரே வந்தஇடர்
     தோகையொடு போனதென
நிலைமாறிப் பாம்பதனை
   பறக்கையிலே விட்டுவிட
பொத்தென்று விழுந்ததுவே
     பாம்புசிறு வன்தலையில்
நச்சென்று நண்டுவிழ
     எலிவிழுந்த தொருதலையில்  !

திண்ணென்று சிறுவருமே
     திடுக்கிட்டு ஓடைவிழ
கண்தூக்கம் கலைந்திட்ட
      கருமேதி நீரில்எழ
வன்முதுகின் மேலிருந்த
     கொக்கதுவும் பறந்துஎழ
கண்மயில்தான் சென்றவழி
     வெண்கொக்கும் பறந்ததுவே!

களப்பயிற்சிப் பெறவந்து
     கண்டுநின்ற மாணவரும்
களக்குறிப்பு நூலதனில்
     கச்சிதமாய் எழுதிநின்றார்
கொக்கென்றால் அச்சம்கொண்டு
      கானமயில் பறந்தோடும்'
அக்கறையாய் மாணவியர்
     அதுவும்தான் எழுதினரே!