எள்ளில் பூவுண்டு நெல்லில் பூவுண்டு
அத்திப்பூ கண்டதும் உண்டோ? - ஆயின்
பூபூத்தே காய்காய்ப்ப துண்டு - வாய்ச்
சொல்லில் பொருளுண்டு செயலில் பொருளுண்டு
சோம்பலில் பொருளேதும் உண்டோ? - அவன்
சோற்றுக்கும் படியளப்பார் உண்டு.
தூயனில் கனிவுண்டு துறவிக்கும் கனிவுண்டு
தீயனுக்குக் கனிவேதும் உண்டோ? - அத்
தீயனுக்கும் தாயின்கனி வுண்டு - மிக்க
பயனுடை பலவுண்டு பயனில சிலவுண்டு
பூமியில் நிலையேதும் உண்டோ? - ஆயின்
பூவுலகில் வீண்ஏது உண்டு?
சாத்திரம் பலவுண்டு சொல்லவும் பலருண்டு
சத்தியம் மறைவதும் உண்டோ? - இங்குச்
சச்சரவும் குறையாது உண்டு - பெரும்
பாட்டைத் தந்தவன் பதவுரை தரவில்லை
பட்டெனப் புரியவழி ஏது? - போ!போ!
பாரினில் உன்வழியைப் பாரு!