அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Thursday, February 23, 2017

வழிப்போக்கன்

எள்ளில் பூவுண்டு நெல்லில் பூவுண்டு
     அத்திப்பூ கண்டதும் உண்டோ? - ஆயின்
     பூபூத்தே காய்காய்ப்ப துண்டு -  வாய்ச்
சொல்லில் பொருளுண்டு செயலில் பொருளுண்டு
     சோம்பலில் பொருளேதும் உண்டோ? - அவன்
     சோற்றுக்கும் படியளப்பார் உண்டு.

தூயனில் கனிவுண்டு துறவிக்கும் கனிவுண்டு
     தீயனுக்குக் கனிவேதும் உண்டோ? - அத்
     தீயனுக்கும் தாயின்கனி வுண்டு - மிக்க
பயனுடை பலவுண்டு பயனில சிலவுண்டு
     பூமியில் நிலையேதும் உண்டோ? - ஆயின்
     பூவுலகில் வீண்ஏது உண்டு?

சாத்திரம் பலவுண்டு சொல்லவும் பலருண்டு
     சத்தியம் மறைவதும் உண்டோ? - இங்குச்
     சச்சரவும் குறையாது உண்டு - பெரும்
பாட்டைத் தந்தவன் பதவுரை தரவில்லை
     பட்டெனப் புரியவழி ஏது? - போ!போ!
     பாரினில் உன்வழியைப் பாரு!