அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Thursday, February 23, 2017

முடிவில்லாத் தொடர்வண்டி

கணகணன்னு
மணி உண்டு;
கூ கூவென்றுல
ஒலி  உண்டு;
கடைசிப்பெட்டியில்
பச்சைக் கொடியுண்டு!

கொடியும் அசைச்சாச்சு;
மணியும் அடிச்சாச்சு;
குப் குப் என ஓசையோடு
உயிருள்ள ரயில் வண்டி,
கடகடன்னு நகர்ந்தாச்சு!

சாட் பூட் த்ரீ கெலித்ததனால்
தேவகிதான் என்ஜின்;
ராமுவும் ரகுமானும் ஏசி பெட்டிகளாம்;
மாரியும் மேரியும் ஓசி பெட்டிகளாம்;
என்றும்போல் இன்றும்
வெள்ளையனே கார்டு
பச்சைநிறத் துண்டுத்துணி
பச்சைக் கொடியாச்சு.

அம்மாக்கள் அப்பாக்கள்
எல்லாரும் கூலியாட்கள்!
நாலுமாடிக் கட்டிடத்தில்
நாளெல்லாம் வேலை
உண்பதற்கே உழைத்தார்கள்;
ஊன்தேய்ந்து மாய்ந்தார்கள்!

எஞ்சினும் பெட்டியும்
என்றென்றும் மாறும்;
எல்லாருக்கும் ஒருநாள்
எஞ்சின் வாய்ப்பு வரும்;
கார்டு மட்டும் மாறவில்லை
வெள்ளையனும் சோரவில்லை!

வெள்ளையனே வா!
என்றென்றும் கார்டு என
ஏன் உனக்கு வேலை?
எஞ்சினாய் பெட்டியாய்
மாற ஆசை இல்லையா;
மனம் ஏதுமில்லையா?

என்ன ஐயா நீங்க,
எல்லோரையும் பாருங்க!
கிழிஞ்சிபோன சட்டையாச்சும்
மேலிலே இருந்தாதான்
பின்னால் உள்ள பெட்டி
கை கோர்க்க வசமிருக்கும்
எல்லோருக்கும் சட்டை உண்டு;
எனக்கு ஏது சட்டை?
அப்பன் ஆத்தா உழைச்சாதான்
அரை வயித்துக் கஞ்சி
ஏழைபாழை எங்களுக்கு
ஏதிருக்குது மிஞ்சி?

கண்கள் நீர் கோர்க்க
காயம்பட்ட  மனம் வேர்க்க
சாட்டையடி பட்டதுபோல்
சமைந்துப் போனேன் நான்!