அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, August 9, 2019

பூனையின் தவம்

கனகமூலம் சந்தையின்
கால்கிலோ கொழிஞ்சம்பாறை
காலிரண்டின் நடுவே அரிவாள்மனையில்;
அருகே,
கண்களிரண்டும் மோன நிலை
துறவுக்கோலப் பூனை!
நான் ஞானி!
நான் சைவன் இன்றுமுதல்!

சரகர சரகர…
தோல் செதில் உரசப்பட்டு,
கரீச் கரீச்…
முதுகிலும் விலாவிலும் செவுள் அறுபட்டுத்
தூர விழுந்தன;
காக்கைக் கூட்டம்
கூச்சலும் கரைச்சலுமாய்,
ஆளுக்கொன்று எனத் தூக்கிப் பறந்தன;
சீ சீ இந்தக் காக்கைகள்
ஆலாய்ப் பறக்கின்ற இழிபிறவிகள்!
பூனை மோனத் தவத்தில்!

 சொத்தென்று வீசப்பட்ட குடர்,
நாய்களின் ஊளைச் சத்தம் காதில்,
கிடைத்த நாய் ஓடியது
கிடைக்காதது துரத்தியது;
சீ சீ இந்த நாய்கள்
அலைந்து திரியும் ஈனப் பிறவிகள்!
பூனை மோனத் தவத்தில்!

 கரகர கரகர…
 மீன்தலை அறுபட்டுக்
காற்றில் மிதந்துக்
கீழே வரும்முன்
அது இருந்தது பூனையின் வாயில்;
ஞானிக்கு விடுதலை!