அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, August 9, 2019

நெல்லைத் தமிழ் - பகுதி 2

31. கூராப்பு - கருமேகம் குளிர்ந்து கருக்கொள்ளுதல். கூர = குளிர் மிகுதல்; முகில், முதிரம், திரள், விசுங்கம், விசும்பு, கொண்டல் என மேகத்தைக் குறிக்கப் பல சொற்களுண்டு. கூராப்பு என்பது தூறலுக்குச் சற்று முந்தைய நிலையைக் குறிப்பாக உணர்த்தும் சொல். அடுத்தது தூறல் அல்லது மழை என்னும் நிலை இது.
நெல்லைப் பேச்சு:
"ஏலே ஐயா, மொட்ட மாடீல துணி காயுது. வானம் கூராப்பா இருக்கு. செத்த, துணிய எல்லா எடுத்துக் கொடுத்திட்டுப் போ ஐயா" மரகதம் தன் மகனிடம் வேண்டினாள்.
"என்ன பண்ண? இன்னா அன்னான்னு ஒரே கூராப்பா இருக்கு. மழயத்தான் காணோம்" மருதப்பன் சக விவசாயியிடம் புலம்பினான்.

32. அல்லாடீட்டு - அல்லாட்டம் கொண்டு, அல்லாடிக்கொண்டு.
அல்லாட்டம் - (துயரத்தில்) அலைதல்.
(இறப்பில் இறப்பு ((past perfect), எழுதிக் கொண்டிருந்தான்(past continuous) போன்ற சொற்களில் உள்ள விட்டு, கொண்டு எனும் சொற்களை 'ட்டு' என்று சுருங்கப் பேசுவது வழக்கம். எழுதி விட்டான் - எழுதிட்டான்; எழுதிக்கொண்டிருந்தான்- எழுதிட்டிருந்தான். )
அல்லாடிக்கொண்டு - அல்லாடிட்டு; அழுத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்த 'அல்லாடீ. ட்டிருந்தான் என்றும் சொல்லுகின்றனர்.

33. சப்பளி - சிதைத்துத் தட்டையாக்கு
சப்பை, சப்பள் - தட்டையானது., சுவையற்றது.
"ஏன்டா அழுகுற" என்ற தாயிடம், "ராமுப்பய நான் செஞ்சு வெச்ச களிமண் புள்ளயார சப்பளிச்சிட்டுப் போய்ட்டான்" என்று சொல்லி அழுதான் அந்தச் சிறுவன்.
 - சிதைத்துத் தட்டையாதல் இங்கே பொருளானது.
" பத்து நாளுக்கு ஒருக்கா இந்தக் கொழாயில நல்ல தண்ணி வரும். அந்தக் கொழாயில தினமும் சப்பத் தண்ணி வரும்" - இது சங்கரன்கோயிலில் பேச்சு. - சுவையற்ற என்பது இங்கே பொருளானது.
சிதைத்துத் தட்டையாக்குவது 'சப்பளித்தல்' என்றால், சமனாகத் தட்டையாக்குவதற்கு என்ன சொல்? அதுதான் 'அப்பளித்தல்'. அப்பளித்தல் - சமனாகத் தேய்த்துத் தட்டையாக்கினால் கிடைப்பது 'அப்பளம்'.

34. ஒக்கல் - இடுப்பு
"ஏட்டீ, தம்பிய இப்படி ஒக்கல்லயே வச்சிட்டுத் திரிஞ்சா என்னக்கிதா அவன் நடக்கப் பழகுவான்" பக்கத்து வீட்டு பார்வதி அழகம்மையைக் கண்டித்தாள்.
ஒக்கல் = சுற்றம் (இலக்கியம்) "குறுமுயல் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு" - புறம் 34
"பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை"- புறம் 69 ஒக்கலில் வைத்து அமுதூட்டேன் -  காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ் - சொக்கநாதர்.

35. குண்டு = ஆழமான, உரக்குழி குண்டு = உருளை, குளம், பருமன், "தீநீர்ப் பெருங்குண்டு சுனைபூத்தக் குவளைக்" - புறநானூறு 116
குண்டு எனும் சொல் மேற்குறிப்பிட்ட பொருட்களில் தமிழகமெங்கும் வழங்கினாலும், 'ஆழமான', 'உரக்குழி' எனும் பொருள்களிலும் நெல்லை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
"அவென் குடிச்சிட்டு எந்தக் குண்டுல உழுந்துக் கெடக்கானோ. யாருக்குத் தெரியிம்?" :
குண்டு = ஆழமான, பள்ளமான.
"நாளக்கிதான் மேலக் குண்டு வய அறுப்பு வெச்சிருக்கேன், ஆத்தா" : மற்ற இடங்களைவிடத் தாழ்வான பகுதியில் உள்ள வயல், குண்டுவயல் எனப்படுகிறது.
"ஏட்டி இசக்கி, தொழுவத்துல இருக்க சாணிய குண்டுலக் கொட்டிட்டு வந்திரு" : குண்டு = உரக்குழி.

36. தாலம், தாலா = தட்டு, உண்கலம் உலோக உண்கலங்களைத் 'தாலா' என்று கிராமங்களில் வழங்குகின்றனர். "ஏலே, சண்ட போடாம அவனவன் தாலாவத் தூக்கிட்டு வெரசாப் போங்க" ராமாயி பிள்ளைகளைப் சத்துணவுப்பள்ளிக்குச் செல்ல விரைவுபடுத்தினாள். பெருந்தோள் தாலம் பூசல் மேவா - புறநானூறு 12
அண்மையில் ஜபல்பூர் சென்றிருந்தபோது, பல உணவகங்களில் உள்ள தகவல் பலகைகளில் இதைக் கண்டேன்: 1 थाली - ₹ 60 அதாவது 1 தாலி/plate/தாலம் சாப்பாடு = ரூபாய் 60. தாலம் நமதுதான். நமது கிராமங்களில் இன்னும் உயிரோடு. நகரத்தில்...ப்ளேட்?

37. கரைச்சல் = தொல்லை, நச்சரிப்பு (வட்டார வழக்கு) கரைச்சல் = உருக்குகை, கவலை (இலக்கிய வழக்கு) "ஐயய்ய்யே.. கரைச்சல் பண்ணாமெ தூரப்போ சனியனே" பேருந்து நிலையத்தில் பிச்சைக் கேட்டு நச்சரித்தவனைத் தூர ஓட்டினான், கந்தசாமி.
அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை. (யாழ்ப்பாண வழக்கு.

38. பைய - மெல்ல, மெதுவாக பைய - பதுக்க (குமரி மா. வழக்கு)
"சைக்கிள்ல பையப் போடான்னா, கேட்டாத்தான. இப்பப் பாரு குப்புற விழுந்துக்கெடக்கான்.."
"பையப் பைய முன்னேறக் கையக் கொஞ்சம் காமி.." கண்ணதாசன்.
"வையகம் முழுதுடன் வளைஇப் பையென" - புறம் 69

(39) ஏலே! (இது இல்லாம திருநெல்வேலியா?)
ஆண்பால் விளி : ஏலே! லே! லேய்! ஏலேய்! ஏய்யா! ஏடே! ஏம்டே!
பெண்பால் விளி: ஏட்டீ! ஏமுட்டீ? ஏக்கீ! (இழி விளிச்சொல்)
ஆண்பால் வினவு: ஏம்லே? ஏம்லேய்? ஏன்டே? ஏன்டேய்?
பெண்பால் வினவு: ஏலா? ஏம்லா? .

40. நட்டாம - நின்றவண்ணம்
"என்ன அவசரமோ? வீட்டுக்கு வந்த பய நட்டாம நின்னுட்டே கஞ்சியக் குடிச்சிட்டு இப்பதான் வெளியில போனான்". உட்கார்ந்து கஞ்சி குடிப்பது இயல்பு. வெகு இயல்பாக 'அங்க நின்னுக்கிடிருக்கான்' என்று சொல்பவர்கள் 'நட்டாம' என்ற சொல்லின் மூலம் அவசரம், கோபம், எதிர்ப்பு என ஒரு அழுத்தம் கொடுக்கும் சொல்லைப் பயன்படுத்துவது வியப்புதான். நடுதல் என்பது இயற்கையான செடி போன்றவற்றை பூமியில் பதித்தலைக் குறிக்கிறது. நட்டுதல், நாட்டுதல் என்பன செயற்கையான கொடிமரம் போன்றவற்றை வலிய நிலைநிறுத்துதலைக் குறிப்பன. வெற்றிக்கொடி நாட்டுதலும் வலிய செய்யப்படும் ஒரு செயலே. நட்ட மரமா(க) என்பதே 'நட்டாம' ஆகியிருக்கலாம். இது சிற்றூர் வழக்கு. நகரம் சார்ந்த சிற்றூர்களில், 'நட்டக்க, நட்டாக்க' என்றும் வழங்குவதைக் காண்கிறேன். 'நட்டமரமாக' என்பது ,நட்டாக்க' ஆகியிருக்கலாம்.

41. உடல் கூறுகள் நெல்லை வழக்கில் :
செவிட்டுல - கன்னத்தில்
செவிள் - கன்னமும் காதும் சேர்ந்த பகுதி
முகர, மூஞ்சி - முகம்
பொடதி, பொடறி - பிடறி
ஒக்கல் - இடுப்பு
சங்கு - கழுத்து
பொறத்தால - முதுகில்
மேலுக்கு - உடம்புக்கு
மயிர் - இழிச்சொல்
மொழி - கணு, கைகால்களின் முட்டி எலும்பு,
மொண்ண, மொழுக்க - வழுக்கை
நொட்டாங்கை - இடது கை
தெத்துப் பல்லு - தெற்றுப் பவ்
ஒன்றரக் கண்ணு - ஒரு கண் ஊனம்

42. ஓர் ஊரின் அருகில் தென்திசையில் சந்தையும் வடதிசையில் சுடுகாடும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஊரில் ஒருவர் "தெக்கே போறேன்" என்று சொன்னால் அவர் சந்தைக்குப் போகிறார் எனப் பொருள். "அவன் வடக்கே போய்ட்டான்"  என்றால்.. உங்களுக்கே இப்போது புரிந்திருக்குமே!
ஊரின் அருகில் உள்ள குளம்,ஆறு போன்றவை, வயல் அல்லது தோப்புகள், இரவில் இயற்கை கழிப்பு இடம், விறகு சேகரிக்கும் காடு, இவை எல்லாவற்றையும் திசையாலேயே உணர்த்துவர். இது இயற்கையோடு ஒன்றி வாழ்வதின் ஒரு கூறு! நகரங்களில் இவ் வழக்கு கிடையாது. சென்னை மக்களுக்குத் திசையே குழப்பமான ஒன்றுதான்.

43. அந்தானிக்கி - அந்த மேனிக்கு. உடன் அப்படியே, அப்பொழுதே "ஒரு இடி இடிச்சது பாத்துக்க. அப்புறம் 'பளீருனு' ஒரு மின்னலு. அந்தானிக்கி புடிச்ச மழதான்..." லட்சுமி தன் தோழியிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொடர்பிடியாகச் சட்டென நடக்கும் செயலை இப்படித்தான் சொல்கிறார்கள். சிற்றூர் வழக்கு இவ்வாறிருக்க, நகரங்களில் "அந்தமானிக்குப் போனவன்தான். திரும்பி வரவேயில்லைலா" எனக் கதை சொல்லி முடிப்பார்கள். நகரத்து வழக்கு, 'அந்தமானி, அந்தாமேனி' என்பனவாகும்.

மேலும் சில சொற்கள்: குந்தானி - உருளைபோல் குண்டானபெண்.
கண்டமானியும் - கண்ட மேனிக்கு.
தோத்தானி - தோற்றுப் போனவன்/ள்.
புழுகானி/புழுகுனி - புழுகு பேசுபவன்

44. 'க்'
"என்னத்த சொல்லுயது. அவன்தான் ஒரு 'இக்கன்னா' வெச்சிட்டுப் போய்ட்டானே. ஒரு பொண்ணடி பாவம் பொல்லாதது பாத்துக்கிடும்". திருமணம் முடிஞ்ச மறுநாள் மாப்பிள்ளைக்காரன் பெண் பிடிக்கவில்லை, வேண்டாம்னு சொல்லிவிட்டு தான் வேலை பார்க்கும் ஊருக்குப் பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டான். காரணம் சொல்ல மறுத்து விட்டான். பெண் ஆதரவற்று நிற்கிறாள். ஊர்ப் பெரியவர்கள் காரணம் விளங்காமல், முடிவு எடுக்கமுடியாமல் பெண்ணுக்காகப் பரிதாபப்பட்டுப் பேசும் சொற்கள் இவை. 'இக்கன்னா' - இழுபறியில் நிறுத்தி வைக்கும் ஒரு குறிப்புச் சொல். மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இருக்கிறதே, அதற்காக! வேலை செய்வது எதற்காக? எனும்போது சொற்றொடர் முடிந்துவிடும். "மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இருக்கிறதே, அதற்காகக்.." இங்கே 'க' வைத்தாயிற்று. எழுதுவதையும் நிறுத்தியாயிற்று. தொடர் முடியவில்லை. மேலும் என்ன சொல்லப்படும் தெரியாது. இதுதான் தொங்கலில் விடுவது.ஒற்று இடுவதின் வலிமை இங்கே புரிகிறது. க், ச், த், ப், எல்லாம்தான் இருக்கிறது. 'க்' முதலில் வருகிறது; அதனால், முதலில் வருவதையே ஆள்வது வழக்கம்தானே. தொணப்பாதே (நெல்லை?) - நச்சரிக்காதே, தொணதொணக்காதே

45. பேச்சு!
நீரு என்ன சொல்லுதீரு? பேச்சுன்னா எல்லாம்தா. பேசிப்புட்டான், பேசிட்டான், பேசிப்போடுவேன் - திட்டுதலைக் குறிக்கும். பேசிட்டான், பேசிப்புட்டான் - பேசிவிட்டான் "கட மொதலாலி என்னப் பேசிப்புட்டாரு" - திட்டினார் பேசிப்போடுவேன் - பேசிவிடுவேன் "நல்லாப் பேசிப்போடுவேன் பாத்துக்க. ஓடிப் போயிரு" - திட்டுவேன் "என்னா பேச்சு பேசுறான், சின்னப்பய" -மிகையாகப் பேசுதல் ஆமா, அப்படியே நீரு பேசீட்டாலும் - பேச்சில் குறைவு

46 : முனி – நுனி (edge)
“அவனுக்கு அடிக் கரும்பு, எனக்கு மட்டும் முனிக் கரும்பா. எனக்கு வேண்டாங் ஆத்தா..” “முருகன்தான் முனி விழுதப் புடிச்சத் தொங்கட்டான் ஆடினான்” (ஆலமரத்தின் நுனி விழுது) படித்தோர் மத்தியில் ‘நுனி’யாக இருந்தாலும் நெல்லைக் கிராமங்களில் ‘முனி’ என்பதுதான் வழக்கு. பேச்சு அநாகரிகம்போல் தெரிந்தாலும் ‘முனி’ என்பதிலிருந்து பிறந்ததுதான் ‘நுனி’ என்பது வியப்பே. கிராமத்துத் தமிழை எள்ளல் வேண்டா. முள்-முன்-முனை-முனி = முற்பகுதி.

47. உடல் மொழி – நெல்லை
ஒக்கல் – இடுப்பு
ஒன்ட்ரக் கண்ணு - ஒரு கண் ஊணம்
கண்ணுமுளி - கண்விழி
கொதவளை– குரல்வளை
கோணக்காலு – நொண்டி
சங்கு - கழுத்து
செவுளு, செவுடு – செவிள்
தெத்துப் பல்லு - தெற்றுப் பல்
நெஞ்சான்கொல – நெஞ்சகம்
நெத்தி – நெற்றி
மண்ட – மண்டை
நொட்டாங்கை – இடது கை
பிட்டி – பிட்டம்
பொடதி, பொடறி - பிடரி
பொறத்தால – புற!முதுகில்
மயிரு – இழிசொல்
முட்டங்கால், முட்டி – முழங்கால்
முட்டி – விரல்களை மடக்கிய கை
மேலுக்கு - உடம்புக்கு
மொகர, மூஞ்சி – முகம்
மொகரக் கட்ட – முகக் கட்டு
மொண்ண, மொழுக்க - வழுக்கை
மொளி - மொழி, கணு, கைகால்களின் முட்டி எலும்பு