அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, February 24, 2017

ஃபாத்திமா

அன்புச் சோதரியே இசுலாம் பெண்மணியே
அன்று  நடந்ததைக் கேட்பாய் மனதுடனே!

உலகெலாம் போற்றும் வீரம் அருகிருக்க
உலகமே வாழ்த்தும் மாதரசி நோயில்விழ

பலகாரம் வேண்டுமா தேவையெனில் சொல்வாய்.
பலகாலும் கேட்டதுதான் இப்போதும் கேட்கின்றேன்!

கடமையில் கண்நோக்கிக் கனிவுடன் அலிகேட்க
பதமாக மறுத்திட்டார் பெண்ணரசி பாத்திமா

நாமிருவர் மனமொப்பி நிக்காஹ் நடக்கையிலே
எந்தை முஹம்ம்மது(ஸல்) ஒன்றிதனை உரைத்தார் :

'மனம் எண்ணிப் பார்த்ததெல்லாம்
   மட்டற்று தரக் கேட்டு 
மனைவியின் ஹக்கை நிறைவேற்றாக்
     கணவனெனப் பேரெடுக்க வொண்ணாதே!

கண்ணிய இறைவனை என்றென்றும் நாடு!
கருணையில் தருவதை உளமோடு நாடு!'

எதிலும் மேலாக என்னுள்ளம் கொண்ட
இதுவே எம்தந்தை உரைத்திட்ட உண்மை!

கனிவோடு நீர்கேட்ட அன்பெனக்குப் போதும்;
கடமையில் தவறாத உமதுள்ளம் போதும்!

நயமாக எடுத்துரைத்தார் நாயகத்தின் அன்புமகள்;
நானிலத்தின் மானுடர்க்கு நிகரற்ற அன்னையவள்!