அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Tuesday, November 24, 2020

பொருநை நாகரிகம்


23-11-2020 அன்று நெல்லை சுழல்கழக கூட்ட அரங்கில் ஆற்றிய எனது உரை : 

தாயே தமிழே வணக்கம்!

... ... ... ... 

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 

கழையிடை ஏறிய சாறும், 

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் 

பாகிடை ஏறிய சுவையும் 

 நனிபசு பொழியும் பாலும் - தென்னை 

நல்கிய குளிர் இள நீரும் 

இனியன என்பேன் எனினும் – தமிழை 

இன்னுயிர் என்பேன் கண்டீர்! என்பார் பாரதிதாசன். 

தமிழ் தோன்றிய பொதிகை மலையில்தாம் பொருநை நதியும் பிறந்து தவழ்ந்து வருகிறது.இவ்வாறு இரு பெரும் பெருமை கொண்ட நெல்லை மண்ணில் நாமும் பிறந்தோம் என்பது எத்துணை பெருமை நமக்கு. அனைவரும் அறிந்த இம் மண்ணின் பெருமையை எடுத்துக் கூற, சிறுவன் நானும் கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதையாக வந்து நிற்கிறேன். பெரியோர் பொறுக்க வேண்டும். 

“தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள செய்துங்கநல்லூர் எனும் ஊரில் நான் கண்டெடுத்த செதுக்கு உளி முதலானவைகள்..” என்கிறார் இராபர்ட் புருஸ் ஃபூட் எனும் ஆங்கிலேயர். 

நமது பெருமையை இராபர்ட் புருஸ் ஃபுட் எனும் ஆங்கிலேயரிடத்திலிருந்தே தொடங்கலாம் என எண்ணுகிறேன். இவரை, இந்திய தொல்லுலகின் தந்தை எனச் சொன்னால் அது மிகையில்லை. ‘வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியாவின் தொல்லாய்வை முன்னெடுத்துச் சென்ற முன்னத்தி ஏர் இவருடையது. தமிழகம், கருநாடகம், மத்திய பைதிரம், பீகார் என இந்தியா எங்கும் சுற்றித் திரிந்து தொல்பொருள் கண்டெடுத்துச் சேகரித்தவர் அவர். அவரது புகழ்பெற்ற நூலான Robert Bruce Foote collection எனும் நூலின் தொடக்கத்தைத்தான் முன்னம் குறிப்பிட்டேன். 

Scraper, Oval, Basalt, on the surface; Found myself, Seidunganallur, Tambrabarani Valley .. 11th January 1883 என்றுதான் அந்நூலைத் தொடங்குகிறார்.

 தாமிரபரணி என்றாலே நமக்கெல்லாம் கெத்துதான். இல்லையா? அது வெற்று இல்லை. நமது தொல்நாகரிகத்தை மேலோட்டமாகப் படித்து அறிந்தாலே அது மெய்யான கெத்து என்பது புரிய வரும். 

 நீர் என்பது மண்ணை மட்டுமல்ல, மனித மனங்களையும் குழைவாக்குகிறது. நீர் என்பது நெளிவு சுழிவால் மட்டும் அழகில்லை; அதன் நெடிய வரலாறும்தான் மிக்க அழகுடையது.

 மேற்குத் தொடர்ச்சி மலையை அறிவோம் ஆயினும் அதன் தென்பகுதி தென்னம்பொருப்பு எனும் பெயரால் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுவதையும் அறிந்து கொள்வோம். . தென்னையிலிருந்து தோன்றியதே தென் எனும் திசைச் சொல். குடகு என்பது மேடான என்றும், குணக்கு என்பது தாழ்வான என்றும் விரிந்த எனும் பொருளில் வடக்கு என்றும் இயற்கை அமைப்பையே திசையாகக் கொண்டவர் தமிழர். தென்னம்பொருப்பு என்பது தென்மலையே அன்றி வேறில்லை. 

 தென்னம் பொருப்பில் உள்ள அகத்தியர்கூடத்தில் தோன்றி கொற்கை வரையிலான பொருநை நதியின் 130 கிமீ நெடும் பயணம் நைல் நதியைவிடக் குறைவானதாக இருக்கலாம்; அமேசானைவிடக் குறுகலாக இருக்கலாம்; ஆனால், பெருமையில் இமயம்போல் உயர்ந்தது நம் பொருநையாறு என்றால் அது மிகையில்லை. ஆண்டு 365 நாட்களும் நீர் ஓடுவது பொருநை நதி. Perennial River. உயிர் நதி.

 சங்கப் பாடல்களில் பொருநை, ஆன் பொருநை, தண்ணான் பொருநை எனும் மூன்று பெயர்கள் காணப்படுகின்றன. பொதுவாக, பாலக்காட்டுக்குத் தெற்கேயுள்ள தென்னம்பொருப்பில் உள்ள ஆறுகள் பொருநை எனும் பெயராலும், வானமலை என்னும் பாலகாகாட்டுக்கு வடக்கேயுள்ள பகுதியில் தோன்றிய ஆறுகள் ‘ஆனி’ என்றும் அழைக்கப்பட்டன. பூவானி, கீழ்ப்பூவானி, பொன்னானி, வானியாறு என்பவை இதற்கு எடுத்துக்காட்டுகளாம். 

 பொலஞ்செய் கழங்கில் தெற்றி யாடும் தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய – என்பது புறநானூறு 36 

 சோழமன்னன் படையெடுப்பின்போது போர்புரிய வாராது அரண்மனையில் முடங்கிக் கிடந்த சேரமன்னன் ஒருவனைக் குறித்துப் பாடும் இப் பாடலில் இவ்வரிகள் வருகின்றன. பாடியவர் ஆலத்தூர் கிழார். இங்கே தண்ணான் பொருனை என்பது கரூர் அருகேயுள்ள அமராவதி என்பார் ஔவை சு. துரைசாமி பிள்ளையவர்கள் . தமது ‘சேர மன்னர் வரலாறு’ எனும் நூலில்தாம் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

 அகநானூற்றுப் பாடலிலும் இந்தத் தண்ணான் பொருநை குறித்த பாடல் வருகிறது. தென் நீர் உயர் கரைக் குவைஇய தண் ஆன்பொருநை மணலினும் பலவே – என்பது அகநானூறு 93

 இப்பாடலின் முன்னுள்ள ஒரு வரியில் ‘வியல் நகர்க் கருவூர் முன்துறை’ எனக் கருவூர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் கூறுவது சரிதான் எனலாம் 

 இவ்வாறு கரூர் அருகில் உள்ள ஆறு தண்ணான் பொருநை எனப் பாடல்களில் குறிப்பிடப்பட்டாலும் பின்னர் பேச்சு வழக்கில் ஆன் பொருநை என்றும் இப்போது அமராவதி என்றும் ஆகிவிட்டது. பொதியமலையில் தோன்றிய ஆறும் தண்ணான் பொருநை என்றே அழைக்கப்பட்டுப் பின்னர் பொருநை என்றும் தாமிரபரணி என்றும் நிலைத்துவிட்டது. 

 “அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராக ஜிஸ்டாம் த்ரத்யச்” என்ற வரிகள் வால்மீகி இராமாயணத்தில் உண்டு. 

அகத்தியரின் தென்னாட்டு வருகையைக் குறிக்கும் வரிகள் இவைதாம். இவ்வாறு வால்மிகி இராமாயணத்தில் வழங்கி வருவதைப் பார்த்தால் தாமிரபரணி எனும் பெயர் நெடுங்காலமாக வழங்கி வருகிறது என்றே தோன்றுகிறது.

 மகாபாரதத்திலும் , ‘குந்தியின் மகனே, தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்’ எனும் வரிகள் வருகின்றன. 

 காளிதாசரின் ரகுவம்சத்தில், ‘தாமிரபரணி மேதயை முக்தா சாரம்ம கோததே’ எனப்பாடப்பட்டுள்ளது. 

இவ்வாறு வடமொழி இலக்கியங்கள் தாமிரபரணி என்று அழைக்க, தமிழ் இலக்கியங்களோ ‘பொருநை’ என்ற பெயரையே பெருமையாகப் பாடி மகிழ்கின்றன. 

 ‘தண் பொருநைப் புனல் நாடு’ என்கிறார் சேக்கிழார் 

‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத்திருந்தி’– என்பார் கம்பர் 

மேலும், பெரிய புராணத்திலும் திருவாய் மொழியிலும்கூட ‘பொருநை’ என்றே புகழப்படுகிறது. 

'குளிர்நீர்ப் பொருநை சுழி பலவாய்' என்றுரைப்பது சடகோபர் அந்தாதி 

இப் பொருநை நதி தொடங்கும் பொதிய மலையின் தென் பகுதியிலும் வட பகுதியிலும், பொருநை நதியின் போக்கிலுமாக, அகத்தியமுனிவர் மட்டும் அல்லாது, மேலும் வாழ்ந்தவர்களாகக் குறிப்பிடப் படுபவர்கள் :

 அதங்கோட்டாசான், தொல்காப்பியர், செம்பூட்சேய், காக்கைப் பாடினியார், நத்தத்தனார், பனம்பாரனார், அவிநாயனார்,வாய்ப்பியனார், வாமனார், வையாடிகளார் எனப் பட்டியல் நீண்டு உள்ளது. தமிழ்ப் பல்கலைக் கழகமே இங்கேதான் இயங்கியதோ என எண்ணத் தோன்றுகிறது இப் பெயர் வரிசைகளைக் கண்டால்.

 தண்பொருநையாற்றின் இரு மருங்கிலும், மனிதக் குடியிருப்புகள் தோன்றி, நாகரிகம் போற்றி, வளமாக வாழ்ந்த வரலாறு காலத்தால் முந்தியது. 

 தென்னம் பொருபில் உள்ள அகத்தியர்கூட மலை உச்சியில் தோன்றி கொற்கை வரைக்கும் நெடும்பயணம் கொள்கிறது பொருனையாறு. பொருனையாறு கடலில் கலக்கும் அந்த இடத்தைச் சேர்ந்தபூமங்கலம் எனும் அழகிய பெயரால் வழங்குவதும் உண்டு. மங்கலம் என நிறைவு செய்வது தமிழர் வழக்குத்தானே. 

 பொருனை நாகரிகம் எனும்போது கொற்கையை நாம் தவற விட்டுவிடவா முடியும்? முற்கால, பிற்காலப் பாண்டியர் வரலாற்றில் மதுரைக்கு இணையாகப் புகழ்பெற்றது கொற்கை.

 "மறப்போர் பாண்டியின் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து" – என்பது அகநானூறு 

பாண்டிநாடு முத்துடைத்து என்று கூறப்படும் காரணமே கொற்கைதாம். மதுரை அரசியல் தலைநகர் என்றால் கொற்கை பாண்டியர்களுக்கு வணிகத் தலைநகராக இருந்தது. பாண்டிய இளவல்கள் கொற்கையிலேயே இருந்து ஆட்சி செய்திருக்கின்றனர்.  

நற்றேர் வழுதி கொற்கை’ என்பது (அகநானூறு. 130) – இங்கே வழுதி என்பது பாண்டியனைக் குறிப்பதாம். 

 கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ என்கிறது (ஐங்குறு. 188). 

 உகுவாய் நிலத்த துயர்மணல் மேலேறி 

நகுவாய் முத்தீன் றசைந்த சங்கம் – 

புகுவான் திரை வரவு பார்த்திருக்கும் 

தென் கொற்கைக் கோமான்" – என்று உரைக்கிறது முத்தொள்ளாயிரம் 

’சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தம்’ என்கிறது (அகநானூறு 201. 3-5) 

இவ்வாறான கொற்கையைப்பற்றிய சங்கப் பாடல்கள் பலப்பலவாம். இவ்வளவு ஏன்? 

சிலப்பதிகார வழக்குரை காதையில், கண்ணகி மதுரை அவையில் வீற்றிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்து, ‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே! என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என பாண்டிய மன்னனைக் கொற்கை வேந்தே என்றுதானே விளிக்கிறாள். 

சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை, கொல்கை குடா’ என்றெல்லாம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 

"கி.பி. 130 வரை கொற்கை பாண்டியரின் முதன்மைத் தலைநகராக இருந்தது. இதன் பின்னரே ஆட்சித் தலைமை மதுரைக்கு மாற்றப்பட்டது" எனும் அரிய செய்தியைத் தாலமி என்ற அயல்நாட்டுப் பயணியின் குறிப்பிலிருந்து உணரமுடிகிறது. 

கிபி130 வரை பாண்டியரின் தலைமையிடமாக இருந்தது கொற்கையில் மணலூர் எனும் பகுதி என்பதும், பின்னர் இப்போதைய மதுரைக்கு அருகில் உள்ள மணலூர் எனும் பகுதிக்கு மாற்றப்பட்டது என்பதும் அறியத் தக்கது. பெருமணலூர் எனப் புலவர்கள் பாடித் தொழும் கீழடிப் பகுதியே அன்றைய தலைநகர் என்று தொல்லியலார்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 கிபி 130க்குப் பின்பும்கூட கொற்கை, விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த செய்தியை இலக்கியங்களில் காணமுடிகிறது. தற்போதைய தொல்லாய்வுகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. பிற்காலத்தில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான்.எனும் செய்தியும் இலக்கியத்தில் உண்டு. 

கொற்கை, பண்டைய தமிழகத்தின் பெரும் துறைமுகம். யவனரும் அரபியரும் சீனரும் தமிழரோடு கலந்து பெருமித நடைபோட்ட மண். பொன்னும் மணியும் பவழமும் முத்தோடு உரசி 'கலுங் கலுங்'கென ஓசையிட்டுத் தோளில் இட்ட துணிப்பைகளில் குலுங்கத் தெருவெங்கும் பன்னாட்டுக் கால்கள் நடைபயின்ற மண். 

கொற்கையின் முத்து குறித்த சிறப்பும் ஆதனால் எய்திய உலகத் தொடர்பும் நாம் அறிந்துகொள்ளவேண்டியவை ஆகும். 

 இப்பி யீன்ற இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது – கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந்து அகலம் கருதியார் கண்ணும் படும்’ என்கிறது (முத்தொள்ளாயிரம். 68) 

கொற்கைக் கரையில் மட்டுமா முத்துக்கள் பிறக்கும்? கொற்கையை ஆளும் பாண்டியனின் மார்பைத் தழுவ எண்ணும் பெண்களது கண்களிலும் பிறக்கும் என்ற பொருளமைந்த பாடல், முத்துக்கள் என்றாலே அது கொற்கைதான் என எண்ணத் தோன்றுகிறது. 

பொருநை நாகரிகத்தின் பின்னணியில் கொற்கை நகரம் எகிப்து, கிரேக்கம், அரேபியா எனப் பல மேலை நாடுகளுடன் பெரும் வணிகம் செய்துள்ளது. தமிழகத்தின் வளம் கொழிக்கும் பூமியாக இருந்துள்ளது. கிளாடியசு, நீரோ (கி.பி. 54-68) போன்றவர்களோடும், பிற மன்னர்களோடும் அரச தூதுவர்களைப் பரிமாறிக்கொண்டு வணிகம் செய்து வந்திருக்கிறது. 

“கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ. 

பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக்காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய் மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் வாசப். 

"முத்துக்களும் பல வகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப்பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் கண்ணாடிச் சாமான்களும் கொற்கை பெருந்துறையில் வந்திறங்கின” என மதுரைக் காஞ்சியும் புறநானூரும் குறிப்பிடுகின்றன. 

இவ்வளவு பெரிய நாகரிகத்தற்குச் சொந்தக்காரர்கள் நாம் எனும்போது பெருமையில் மனம் பூரிப்பது உண்மைதானே. 

பொருநை நாகரிகம் எனும் அழகிய சொல்லைத் தலைப்பாக எனக்குப் பேசத் தந்தீர்கள். பொருநை நாகரிகமா பொருநைப் பண்பாடா? – இதில் பொருநை நாகரிகம் என்பதே நான் எடுத்துக்கொண்ட தலைப்பு. . பண்பாடு என்பது வேறு. பண்பாட்டிலிருந்து கிளைத்து எழும் நாகரிகம் என்பது வேறு. நாகரிகத்தை ‘நாகரீகம்’ என்று கூறுவது வடவழக்கு. ஆன்மீகம், நாகரீகம் என்பன வட வழக்குகளாம். நாகரிகம் என்பது தமிழ் வழக்கு. 

 சற்று நாட்களுக்கு முன், கீச்சுலக நண்பர் ஒருவர் ‘நாகரிகம் என்றால் என்ன?’ எனும் கேள்வியை எழுப்பியிருந்தார். ‘நீர்ச்சீலை’ என்று பதில் அனுப்பியிருந்தேன். கீச்சுலக நண்பர்கள் பலரும் புரியாமல் கடந்து சென்றனர். அதனை இன்றைய தமிழில் எழுதியிருந்தால் கட்டாயம் புரிந்திருப்பர். நீர்ச்சீலை என்பது வேறொன்றுமில்லை. கோவணம் என்று சொல்கிறோமே அதுதான். 

யாரும் பார்க்காத நிலையிலும் உடல்நலம் பேண உள்ளாடை அணிவதை முதன்மை என்று கருதினானே தமிழன். அதுதான் பண்பாடு - தமிழர் பண்பாடு. கந்தையானாலும் கசக்கிக்கட்டு எனத் துப்புரவு செய்து உடுத்த வேண்டும் என்று சொன்னானே அது தமிழர் நாகரிகம். அதனையே எல்லோருக்கும் தெரியுமாறு அணியும் நாகரிகத்துக்குக் கொண்டுவந்துவிட்டோம் இன்று. அது அநாகரிகம். 

 ‘நாகரிகம்’ என்பதைத் ‘திருந்திய வாழ்க்கை’ எனும் அழகிய சொற்றொடரால் நிறைவு செய்வார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். 

 திருந்திய வாழ்க்கை என்பது எல்லா வகையிலும் துப்புரவாக இருப்பது, காற்றோட்டம் உள்ளதும் உடல் நலத்திற்கு ஏற்றதுமான வீடுகள் கட்டி குடியிருப்பது, சமுதாய இணக்கத்தை வரையறுத்து வாழ்வது. இவையெல்லாம் நாகரிகம் என்பேன். 

 திருந்திய வாழ்க்கையே நாகரிகம் என்றால் ‘திருந்திய ஒழுக்கமே’ பண்பாடு எனலாம். எளியாரிடத்தும் இனிதாகப் பேசுதல், விருந்தோம்பல், இரப்போர்க்கு ஈதல், தன்னின மானம் கெடும் காலத்தே போரிடுவதும் பண்பாட்டுக் கூறுகளாம். சுருக்கமாகச் சொன்னால் செம்மையான பண்பாட்டின் வெளிப்பாடுதான் நாகரிகம். 

 அதனையே, ‘அகநாகரிகம், புறநாகரிகம்’ எனக் குறிப்பிடுவார் பாவாணர். பண்பாடு எனாபது அகநாகரிகம். வெளித்தோற்றங்களால் சிறப்புறுவது புறநாகரிகம். 

 நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று. தன் செய்வினைப் பயனே. சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கன் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே” – நற்றிணை 210 (5-9) 

இங்கே ‘செல்வம்’ என்பது நாகரிகம் எனும் பொருளிலேயே கூறப்படுகிறது. புகழ்ந்து பேசுதல், விரைவாகச் செல்லும் ஊர்தியைப் பெற்றிருத்தல் நாகரிகம் ஆகாது. இது தனது உழைப்பால் பெற்ற உயர் நிலை. தன்னைச் சேர்ந்தோருடைய துன்பத்தை மனதில் அறிந்து அவர் கேட்கும் முன்னே நீக்குதல் பண்பு என்கிறார். இது தமிழர் பண்பாடு. 

 ஆகவே நாம் பார்க்கப் போவது பொருநை நாகரிகம் மற்றும் அதன் பிறப்பிடமாகிய பண்பாடு. பொருநை பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிய நமக்கு உதவுவன சங்கப் பாடல்களே. நாகரிகத்தை அறிய உதவுவன தொல்லாய்வுகள். 

தொல்லாய்வு முடிவுகளிலிருந்து அறியவரும் நாகரிகக் கூறுகளைப் பண்பாட்டின் எச்சமாகப் பிரித்து அறிய தொல்லாய்வு அறிஞர்கள் உதவுவார்கள். 

 நாகரிகத் தொட்டில்கள் என்று அழைக்கப்படும் பெரும் நாகரிகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியவை என்பதை அனைவரும் அறிவோம். அதுபோல் நமது சிறப்பான பொருநை நதியில் தோன்றிய நாகரிகத்தையும் உலகறிய எடுத்துச் சொல்லும் பல தொல்லியல் ஆய்வுகள் நடந்துள்ளன. 

 மதுரை வைகைக் கரை மற்றும் அருகில் உள்ள தொல்லாய்வு இடங்களாக 293 இடங்கள் குறிக்கப்பெற்று ஆய்வு நடத்தக் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் பொருநையின் கரையிலும் கொங்கராயக்குறிச்சி, மணக்கரை, வல்லநாடு, வாழவல்லான், செய்துங்கநல்லூர், குதிரைமொழித் தேரி ஆகிய பல இடங்களில் தொல்லாய்வு நடத்தக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசிடமும் நடுவண் அரசிடமும் கோரிக்கைகளை வைத்துப் போராடிக்கொண்டிருகாகிறார்கள் நண்பர்கள். நீதிமன்றத்தையும் அணுகிக் கொண்டிருக்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு ஐயா அவர்கள். மற்றும் சமுக ஆர்வலர் நாறும்பூநாதன் ஐயா அவர்களும் நெல்லைத் தொல்லியல் ஆய்வுலக ஆர்வலர்கள் குழுவும் இதற்கான பெரு முயற்சியில் விடாது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காண்கிறேன்.

 அதன் விளைவாக ஆதிச்சநல்லூரில் 6ஆம் கட்ட தொல்லாய்வும், சிவகளையில் முதல் கட்டத் தொல்லாய்வும் இவ்வாண்டு மே மாதம் தொடங்கி அக்டோபர் 2020 இறுதியில் நிறைவு பெற்றுள்ளது. ஆதிச்சநல்லூரில் தொல்லாய்வு அலுவலர்கள் பாஸ்கரன் மற்றும் லோகநாதன் தலைமையிலும், சிவகளையில் தொல்லாய்வு அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் தங்கதுரை ஆகியோர் தலைமையிலும் அகழ்வாய்வுகள் நடைபெற்றன. மீண்டும் ஆய்வுகள் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. 

 1876ல் செருமானிய நாட்டின் ஜோகோர்தான் ஆதிச்சநல்லூரில் முதல் ஆய்வைத் தொடங்கியவர். கிடைத்த பொருட்கள் எண்ணற்றவை. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய எல்லைக்குள் ஆற்றங்கரையில் நடந்த தொல்லாய்வுகளில் முதல் ஆய்வு இதுதான் என்பர் தொல்லியலார். ஆகவே, இந்தியத் தொல்லியல் ஆய்வின் பிறப்பிடம் பொருனையாறு என்று சொன்னால் அது மிகையில்லை. 

 பின்னர் 1903ல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயிசு லாபிக்யூ என்பார் தம் பங்குக்குச் சிலவற்றைத் தோண்டி எடுத்துப் பிரென்சு நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். இருவருடைய தொல்பொருட்களும் கணக்கில் வராமல் போயின.

 அதே வேளையில் 1903ல் அலெக்ஸாண்டர் ரியா என்பவரும் ஆதிச்சநல்லூரில் தம் ஆய்வைத் தொடங்கினார். இவர்தாம் முறைப்படியான அரசுஆணையின் பேரில் நியமிக்கப்பட்ட முதல் தொல்லியலாளர். இவர், தாம் கண்டெடுத்த பொருட்களை 13 படங்களாக முறைப்படி வெளியிட்டார். இவ்வாறு பல கட்டங்களாக நடந்த தொல்லாய்வின் ஆறாம் கட்டம் கடந்த அக்டோபர் 2020 இறுதியில் நிறைவு பெற்றுள்ளது. 

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் முதன்மையானவை மூன்று மண்டையோடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பெற்ற மண்பானைத் துண்டுகள், தங்க நெற்றிச் சுட்டி, இரும்புக் கருவிகள், சங்கு அணிகலன்கள் ஆகியவையே. எல்லாமே முதுமக்கள் தாழிகளாகவும் அதனோடு உள்வைக்கப்பட்டதாகவும் கிடைத்தவைதாம். 

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார். 

 1. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாக இருந்தனர். 

2. குதிரைகளைப் பயன்படுத்தக் கற்றிருந்தனர். 

3. இரும்பை உருக்கவும் வார்க்கவும் அதை வைத்து போர் கருவிகள் செய்யவும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. 

 4. முருகனையும் கொற்றவையையும் தெய்வமாக வழிபட்டனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிறிய வேல், முருகு வழிபாட்டின் எச்சம் எனலாம்

5. ஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு நெல் நாகரிகம்.


 தற்போது 6ஆம் கட்ட அகழாய்வில் மட்டும் 72 முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. சிவகளையிலும் பெரும்பான்மையாகக் கிடைத்தவை முது மக்கள் தாழிகளே. 

முன்னம் கிடைத்த பானைத் துண்டுகளை கரிமம் 14 ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவை கிமு 905 மற்றும் 791 காலத்தியவை எனத் தெரிய வந்துள்ளது. 3000 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான தமிழர் வரலாற்றை இதுவரை நடந்த ஆய்வுகள் மூலம் கண்டுள்ளோம். 

வரலாற்றுக் காலம் என்பது ஓர் இனத்தின் பேச்சு மொழியானது எழுத்தாக மாறி எழுது பொருட்கள் தோன்றிய காலம ஆகும். . அதற்கு முந்தைய காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் என்போம். 

 வைகையிலும் பொருநையிலும் நடக்கும் ஆய்வுகள் சற்று வேறுபட்டன. ஐந்து கட்டங்களாக நடந்துள்ள வைகை ஆய்வில் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் என மக்கள் வாழ்விடமே அதிகமாகக் கண்டெடுக்கப் பெற்றது. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் முதுமக்கள் புதைகுழிகளே அகழ்ந்தெடுக்கப் பெற்றன. 

வைகையின் போக்கு காலப்போக்கில் மதுரைக்கு அண்மையில் தெற்கிலிருந்து சற்று வடக்காக நகன்றுவிட்டது. இப்போது நடந்த ஆய்விலும்கூட அகரம் என்ற பகுதியில் ஆறு உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு அது வைகையின் திசை மாற்றத்தை உறுதி செய்வதாகக் கூறுகின்றனர். . மக்களும் தங்கள் வாழ்விடங்களைத் தெற்கிலிருந்து வடக்கேயுள்ள மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி அமைத்துக் கொண்டனர். பழைய குடியிருப்பாகிய தென்பகுதி நகரம் அகழாய்வில் வெளிப்பட்டது. பொருநை நதிக்கரையில் மக்கள் வாழ்விடங்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்விடமாகவே உள்ளதால் ஆய்வில் அவற்றை உட்படுத்த இயலவில்லை. ஆதலால், பொருநையின் வாழ்விட நாகரிகம் இன்னமும் அறியப்படாமலேயே உள்ளது. 

 தமிழர் வரலாற்றைப் பொறுத்த அளவில், கீழடிதான் தொடக்கமோ அன்றி ஆதிச்சநல்லூர்தான் தொடக்கமோ என்று உறுதிப்படுத்தத் தேவையில்லை. ஏனென்றால் அதற்கு முன்னரே 15 லட்சம் ஆண்டுகளாகவே தமிழகத்தில் மனித இனம் வாழ்ந்தது என்பதற்கான சான்றுகள் கிடைத்துக் கொண்டுதான் உள்ளன. அவற்றில் ஒன்று அத்திரம்பாக்கம். சென்னைப் பூண்டி நீர்த்தேக்கப் பகுதிதான் அத்திரம்பாக்கம். அத்திரம்பாக்கத்தைத் தற்செயலான ஒரு பயணத்தில் கிபி 1863ல் கண்டுபிடித்ததும் இராபர்ட் புருஸ் ஃபுட்தான். 

அத்திரம்பாக்கத்தில் கி.மு. 15,10,000 என மதிக்கத்தக்க பழமையான தழும்பழி (Acheulean ) ஆயுதங்கள் கிடைத்துள்ளன. தழும்பழி, தழும்புரி என்னும் வேட்டைக் கருவிகளின் பயன்பாட்டைத் தொல்லியலாளர்கள் கிமு. 15 லட்சம் ஆண்டு முதல் கிமு.20லட்சம் ஆண்டுவரை எனக் குறிப்பிடுகின்றனர். அதனால் தமிழகத்தில் கீழைப்பழங்கற்காலத் தொடக்கம் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னும் எனச் செல்லலாம். தமிழகத்தில் வாழ்ந்த அம்மனிதர்கள் ‘ஹோமோ எரக்டஸ்’ என வரையறுத்துள்ளார்கள். 

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடுமுன்தோன்றி மூத்த குடி” என்பார்களே அது மெய். ஏறக்குறைய 20 இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னரே தழும்பழி, தழும்புரி எனும் வேட்டைக்கருவிகளைச் சுமந்தவன் தமிழன். ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதன்மைப் பொருட்களுள் இரும்பினால் செய்த வாள்களும் உண்டு எனும்போது ‘மூத்தகுடி’ எனும் பெருமை உடையோர் நாம்தாமே. 

 ஆக, ஆதிமானுடர் தோற்றமும் வளர்ச்சியும் தமிழகத்தில் உண்டு என்பது ஆய்வின் முடிவு தெரிவிக்கும் கருத்துகள் எனத் தெரிய வருகிறது. இது குறித்து ஆய்வுகள் தொடரவேண்டிய சூழலில் காத்துக் கொண்டிருக்கிறோம். காத்துக்கொண்டே இருக்கிறோம் என்பது சற்று வேதனையாக உள்ளது. 

இறுதியாக, நாம் பொதிய மலைக்கே திரும்புகிறோம். பொதியம், தென்பொதியம் என்றெல்லாம் போற்றப்படும் பொதிகை மலையில்தாம் தமிழ் பிறந்தது என்பர். 

அதனால்தான், ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே” எனத் தமிழன்னை போற்றப்படுகிறாள். 

அந்தப் பொதிய மலையில் தோன்றிக் கொற்கையில் கடலோடு கலக்கும் ‘தண்பொருனை’ ஆற்று நாகரிகமே தமிழரின் முதல் நாகரிகம் என்பார் நுண்கலை அறிஞர் சாத்தான்குளம் ஆ. ராகவன். 

 அதையே நானும் வழிமொழிந்து என் சிற்றுரையை முடிக்கிறேன். நன்றி! வணக்கம்! === === === === === 

Saturday, November 7, 2020

நெல்லை வட்டார வழக்கு - பாகம் 1



#நெல்லை_வட்டார_வழக்கு 
பாகம் 1 

1. மொதண்டாதிக - முரண்டு(அடம்) பிடிக்காதீர்

“அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. இப்பதக்கி நெலத்துக்கு இதுதான் வெல.." 


2. வைக்கச்சண்டு - வைக்கோல் சண்டு, கூலம், பதர் 

“பலவேசம் இருக்கானே, கட்டேலே போவான், ஒரு வைக்கச்சண்டுக்கும் பெறாத பய.." 

3. மானாங்கண்ணி - ஒழுங்கீனம் (மானாங்காணி மரூவு) 
"இந்தா, எங்கிட்ட வம்புவளக்காத. அப்றமேட்டு நான் மானாங்கண்ணியா பேசிப்புடுவேன்" 

 4. வழிச்சுக் கொட்டு - மொத்தமாக் காலியாக்கு 
"மருதூர்க்காரி குடும்பத்தோட வந்து வழிச்சுக் கொட்டித் தின்னுட்டுப் போய்ட்டா.." 

 5. வடிச்சுக் கொட்டு - சமையலறையே தஞ்சம் 
"ஒங்க மொத்தக் குடும்பத்துக்கும் வடிச்சுக் கொட்டத்தான் ஏமாளி நா இருக்கேனே.." 

 6. நீத்தண்ணி - நீராகாரம் 
"பால் இல்லைனா என்ன. . என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்றார் பிள்ளைவாள். 

 7. நீச்சத்தண்ணி - நீராகாரம் (நீர்த்த+தண்ணீர்) (நீச்சு, நீர்த்து என்பதின் மரூவு) 
"கஞ்சி இல்லாட்டி ஒரு வாய் நீச்சத்தண்ணியாவது குடு தாயி. . " கேட்டாள் மாடத்தி. 
குறிப்பு: நகரம்: நீத்தண்ணி = நீர்+தண்ணீர் ? கிராமம்: நீச்சத்தண்ணி = நீர்த்த(மரூவு)+தண்ணீர். 
சோற்றில் ஊற்றிய நீர் நீர்த்துப் போவதாலேயே நீராகாரம் ஆகிறது. 
கிராம மக்களின் உச்சரிப்பு கொச்சையாகத் தெரிந்தாலும், கிராமங்கள் தமிழின் தொன்மையை அடைகாத்து வருகின்றன. 

8. பொசங்கெட்டு - மனம் திரிந்து 
பொசம்முட்டு - அவன்தான் பொசங்கெட்டுப் போய் பேசுறாம்னா நீயுமாடே ஒத்து ஊதுற... 

9. இம்பிட்டு, அம்பிட்டு, எம்பிட்டு = இவ்வளவு, அவ்வளவு, எவ்வளவு. 
“இம்பிட்டுஞ் செஞ்சிட்டுத் திருதிருன்னு முழியப் பாரு” = இவ்வளவும் செய்துவிட்டுத் திருதிருவென்று விழிப்பதைப் பார் 
இம்மட்டு, அம்மட்டு, எம்மட்டு ஆகியவற்றின் மரூவுதான் இம்பிட்டு, அம்பிட்டு, எம்பிட்டு.
 இ+மட்டு=இம்மட்டு (தோன்றல் விகாரம்) 

 10. சீக்காளி - நோயாளி (சீக்கு+ஆள்+இ) 
 சீக்கு - நோய்; சீழ்க்கை என்பது இதன் மூலச் சொல் ஆகும். 
தொடர்ந்து நோயாளியாக இருப்பவரைச் சீக்காளி என்பார். 
"ராமசாமியல்லாம் கூப்புடாத. அவென் ஒரு சீக்காளிப்பய. ஒரு சோலிக்கும் ஒதவமாட்டான்" 

 11. சேக்காளி = நண்பன் சேர்க்கை+ஆள்+இ = சேர்க்கையாளி, சேக்காளி என மருவியது.
மற்றொருவனோடு சேர்ந்து நட்பாகும் ஒருவனைச் சேக்காளி என்கின்றனர். 
"உன் சேக்காளி வந்துட்டுப் போனான்." 
"அவன் சேக்காளிதான நீயி. புத்தியும் அவனப்போலத்தான்..." 

 12. கூட்டாளிங்க = நண்பர்கள் கூட்டு+ஆள்+இ =பலரும் நட்போடு கூடும்போது அவர்களைக் கூட்டாளிகள் என்கின்றனர். 
பொதுவாகப் பலர்பாலிலேயே இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். 
"குறிச்சி மாடசாமிக் கோயிலு கொடைக்கி கூட்டாளிங்கூட போன எடத்துல வம்பு வளத்திருக்கான்." 

 13. தொம்பர = (வேலையற்று) ஊர் சுற்றுபவன்/ள் 
வாயாடித் தொம்பர = ஊர் சுற்றி வம்பு பேசித் திரிபவன்/ள் 
"ஆத்தா, மேல ஊரு காளியம்மாவ எனக்கு பொண்ணு பாக்க போவேண்டா. அவ ஒரு வாயாடித் தொம்பர. அப்பறம் வம்பு தீத்தே நம்ம வாநாள் தீஞ்சிரும்" 
(குறிப்பு: தொம்பறை = தானியக் களஞ்சியம், குதிர். தொம்பரையை அதிகமாகப் பயன்படுத்துவதன் காரணமாகத் 'தொம்பறை'க்குப் பதில் குலுக்கை, குதிலு(குதிர்) பயன்படுத்துகின்றனர்) 

14. துப்புக் கெட்டவன் = தெரிந்து செயல்வகை செய்யாதவன். 
 துப்பு = துப்புதல் எனும் செயல்வகை. ( துப்பு = திறமை, வலிமை, அறிவு, உளவு எனப் பொருள்தரும் என்றாலும், துப்புதல் மற்றும் உளவு பார்த்தலோடு பயன்பாட்டை நிறுத்திக் கொள்கிறார்கள்) 
 "பிச்சாண்டி மவன் துப்புக்கெட்டுப்போயி படிச்ச மூதியக் கட்டிட்டு வந்து நிக்கான். நாலு கை வேல பாத்தாத்தான விவசாயி மிச்சம் பாக்க முடியும்" 
"ஏல கண்டமானிக்குத் துப்பிக்கிட்டு அலயாத. உனக்கு உங்கப்பன் சப்பாணின்னு பேரு வெச்சதுக்கு துப்பாணின்னு வெச்சிருக்கலாம். 

 15. கங்குகரை - அளவு, எண்ணிக்கை 
 'அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனை கொடுப்பதாக பாதிரியார் வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி கங்குகரையில்லாமல் பிறந்தது. ' - புதுமைப் பித்தன் 
'கங்கு கரையில்லாத அந்தத் தேரிக் காட்டில். . ' - தாமரை செந்தூர் பாண்டி 

 16. சொக்காரன் - பங்காளி, சொந்தக்காரன், உறவினர் 
சொந்தக்காரங்க என்ற நேரடிச் சொல்லில் பிறந்தது. 
சொந்தம் - சொம்+காரன்
 " ஏப்பே. . சொக்காரங்க எல்லாம் வந்து பட்டம் கட்டிக்கங்க. . ." வெட்டியான் சங்கை ஊதி அறிவிப்பு கொடுத்தான். இறந்துபோன ராமசாமியின் உறவினரும், சிறு குழந்தைகளும் வெட்டியானிடம் பட்டத்தை வாங்கித் தலையில் வைத்துக் கொண்டனர். 
பட்டம் - சிறிய பனைஓலைக் கொட்டான். உள்ளே கொஞ்சம் உதிரிப்பூவை போட்டு வைத்திருப்பார்கள். 

 17. வேசடை - மனவேதனையில் தளர்ந்து போதல் 
 வேசடை = வேதனை + சடைவு " 
தண்ணியில்லாம பயிரெல்லாம் காஞ்சு கெடக்குன்னு நானே வேசடையில் இருக்கேன். இப்ப எதுக்கு ஆத்தா எனக்கு கல்யாணம்.." பச்சமுத்து அம்மாவிடம் வேதனைப்பட்டான். 

 18. பண்ணுதல் - சமைத்தல் பண்ணுதல் என்பதற்கு திருத்தி அமைத்தல், அலங்கரித்தல், இசைப்படுத்துதல் என்று பொருள் உண்டு. 
ஆயினும், "நீ என்ன பண்ணுகிறாய்? = நீ என்ன செய்கிறாய்?" என்ற பொதுபயன்பாட்டையே அதிகம் கொண்டுள்ளது. 
நெல்லைச் சிற்றூர்களில் சமைத்தல் என்ற பொருளில் வெகு எளிதாகப் பயன்படுத்தப்படுகிறது. 
 "ஏட்டீ கோமு, உங்க வீட்டுல என்ன பண்ணீங்க?" இது என்ன கேள்வி? வீட்டில் ஆயிரம் நடந்திருக்கும். இந்தக் கோமதி என்ன சொல்லப் போகிறாள் என்றுதானே எண்ணுவோம்? "எங்க வீட்டுல கத்தரிக்காக் கொழம்பு." என்று கோமதியிடமிருந்துப் பதில் உடனடியாக வரும். 
பண்ணுதல் = சமைத்தல்

 19. மேலுக்கு - உடம்புக்கு 
 மேலுக்கு - மேலோட்டமான உடல் சார்ந்த நிலை. 'பண்ணுதல்' என்பது நெல்லைப் பெண்களிடையே 'சமைத்தல்' என வழக்கில் இருப்பதுபோல 'மேலுக்கு' என்ற பொதுசொல் 'மேல் உடம்பு' எனும் குறிப்புப் பெயராகப் பயனுறுகிறது. 
"ஏலே, பொழுது போயி கூதலு அடிக்கிது. மேலுக்கு ஒண்ணியும் போத்திக்காம எங்க கெளம்பிட்ட?" என முருகாயி மகனைக் கண்டித்தாள். 
 "என்னவே.. ஒருமாதிரியா இருக்கீரு...மேலுக்கு என்னாச்சி. வைத்தியரப் பாக்க வேண்டிய தானே" என்று சுடலைமுத்து தன் நண்பரிடம் கேட்டார். 

 20. தொங்கட்டான் - காதணி (ஜிமிக்கி) 
'தொங்கட்டான்' என்பது எவ்வளவு எளிய பொருள் பொதிந்த சொல்லாயிருக்கிறது! குதம்பை, குழை, கடிப்பிணை என்று பனையோலையாலும், சங்கினாலும் செய்த காதணிகளை அணிந்தனர் பண்டைய தமிழர். அண்மைக் காலங்களில்கூடத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வயது முதிர்ந்தோர் பாம்படம் அணிவதும் வழக்கமாக இருந்துள்ளது. எல்லாப் பெயர்களும் காரணத்தோடுதான். 
"நேத்துதா செல்விக்குக் கம்மலும் தொங்கட்டானும் கூலக்கடை பசார்ல வேங்கிட்டு வந்து போட்டேன். வயசுக்கு வந்த புள்ள ஈக்குச்சிய சொருவிட்டு நின்னா நல்லா இருக்காதுல..." 

 21. யாரூங்குவ - யார் என்குவை? = யார் எனக் கேட்பாய்? 
இவன் யார் என்குவை ஆயின், இவனே. - புறம் 13 
நெல்லைச் சிற்றூர்களில் 'யாரூங்குவ' என்பது இனிய தமிழின் ஓர் இன்புறும் சொல். இருவருக்கு இடையேயான உறவு குறித்த வினாவாகவே இது எழுப்பப்படுகிறது. "மாடசாமிக்கி கொளத்தூரான் யாரூங்குவ? ரெண்டுபேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு சொக்காரங்கல்ல" 
யாரும்ப, யாருன்னுவ - யார் என்பாய்? யாருங்கிற - யார் என்கிறாய்? 
ஊர்ப்புறங்களில் 'யாரும்ப' என்றும், நகர்ப்புறங்களில் 'யாருன்னுவ', 'யாருங்கிற' என்றுமே அது வினவப்படுகிறது. 

 22. தெம்மாடி - உதவாக்கரை 
"அவன் ஒரு தெம்மாடிப் பய. பொண்டாட்டிய வெச்சுக் காப்பாத்தத் தெரியாதவன்" 
மூலமோ, வேர்ச்சொல்லோ இல்லாததால் இது மிகப் பிற்காலத்தில் தமிழக வந்து வழங்கிய சொல்லாகவேணும். 
'திம்மன்' என்றால் ஆண்குரங்கு. திம்மன் என்பதன் திரிபாக தெம்மன்+ஆடி=தெம்மாடி ஆகியிருக்கவும் கூடும். 
"பொம்மனோ திம்மனோ..அதோ, இரண்டுபேர் போனாங்க" என்பதில் யாரோ தேவையற்ற இருவர் என்பதே பொருள் ஆவதையும் நோக்குக. பொம்மனோடு சேர்த்துப் புழங்குவதால் 'திம்மன்' என்பது நாயக்கர்கள் காலத்துச் சொல்லாகவும் இருக்கலாம். 
தெம்மாடி என்பது நாஞ்சில் நாட்டில் அதிகப் புழக்கத்தில் 'உதவாக்கடை' என்ற பொருளிலேயே வழங்குகிறது. ஆனால், நெல்லையில் 'ஆண்மையற்றவன்' என்ற இழிவுச் சொல்லாக உள்ளது. 
(குறிப்பு: தெம்மாங்கு என்பது இனிய தமிழ்ச் சொல். அது வேறு) 


 23. நொள்ள நொட்ட - நொள்ளை நொட்டை = எல்லாவற்றையும் குறை சொல்லித் திரிபவன். 
நொள்ளை - குருடு; 
 நொட்டை - குறை சொல்லுதல் 

"எந்த மாட்டக் காணிச்சாலும் நொள்ள நொட்டசொல்லுததே வேல ஒனக்கு. உருப்படியா வண்டிமாடு வேங்கிக்கிடமாட்ட நீயி" சந்தையில் வண்டிமாடுகள் வாங்க வந்த மாடசாமியிடம் மாட்டுத் தரகர் சலித்துக் கொண்டார். 
எல்லா மாட்டையும் குறை சொல்பவன் எந்த மாட்டையும் வாங்கமாட்டான் என்பதுதான் அதன் பொருள். 

'நொள்ளை நொட்டை' என்பது 'நொள்ள நொட்ட' எனப் பேசப்படுகிறது. 
 'ஐ' என்பது இரண்டு மாத்திரை ஒலிக்குறிப்பு ஆனாலும் , செய்யுளில் ஒரு மாத்திரையாகக் (குறில் ஆக) கொள்ளலாம் என்ற விதி உண்டுதானே.பேச்சு வழக்கை முறைப்படுத்த எழுந்ததே இலக்கணம். என்னையெனில், பேச்சே முதலில் தோன்றிற்று என்பதால் ஆம். பேச்சு வழக்கில் 'காலயிலே, வாக்கப்பட்டு' என்றெல்லாம் 'ஐ' ஒரு மாத்திரையளவே பலுக்கப்படுகிறது. அதுவே ஆகுமான விதியாகப் பாக்களிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதே சரி. 



 24. லெக்கு - திக்கு, திசை, அடையாளம் 
 லெக்கு = இலக்கு எனும் சொல்லின் பேச்சு வழக்கு. 

"அவனடியில் நதி ஒன்று ஓடியது. ஆனால், லெக்கு புரியவிலலை. சாவதானமாகக் கண்களை வெகுதூரம் ஓட்டினான்" - புதுமைப் பித்தன் 'இலக்கு' எனும் சொல் மனதில் உறுதியாக கொள்ளும் 'குறிக்கோள்' எனவும் கொள்ளப்படும். ஆயினும், 'அடையாளம்' எனும் இடக் குறிப்புச் சொல்லாகவே அதிகம் பயன்படுத்தப் படுகிறது. 
நெல்லைப் பேச்சு வழக்கு: "பூநாத புள்ள தோட்டத்துல பெரிய நாவ மரத்துக்கு அடீல லெக்கு வெச்சிருக்கேன். அங்கணதான் நகய பொதச்சி வெச்சிருக்கேன்." எனத் திருடன் போலீஸ்காரரிடம் உண்மையைக் கக்கீட்டான். 
"எந்த லெக்குல அடிக்கே நீயி. குப்பாத்தா வீட்டுக் கூர மேலயா அடிப்ப. இப்ப யாரு போயி எடுக்கது", கம்புக் குச்சி விளையாடிய சிறுவர் பேசினர். 

 25. வக்கணை - திறமையான பேச்சு. 
கேலி, கிண்டல், வெற்றுத்துதி, நிந்தனை என இடத்துக்குதக்கவாறு பேச்சின் பொருள் மாறும். 

"வக்கணையால் இன்பம் வருமோ?" - தாயுமானவர் : பராபரக்கண்ணி 213 

நெல்லைப் பேச்சு: “ஏலே… ஒன் வக்கணையெல்லாம் இருக்கட்டுமிலே. எருமை அத்துக்கிட்டு ஓடுதுபாரு..  மறிச்சுப் பிடிச்சா?” என்றாள் கிழவி. 

"வக்கணையாப் பேசுனா காரியம் ஆயிடுமாவே. உம்ம சொல்லுலா இங்க செலவாகாது. தெரிஞ்சிக்கிடும்" பட்டா கேட்டுவந்த விவசாயியிடம் தலையாரி எடுத்துரைத்தான். 


 26. கூராப்பு - கருமேகம் குளிர்ந்து கருக்கொள்ளுதல். 
கூர = குளிர் மிகுதல்; 
 முகில், முதிரம், திரள், விசுங்கம், விசும்பு, கொண்டல் என மேகத்தைக் குறிக்கப் பல சொற்களுண்டு. கூராப்பு என்பது தூறலுக்குச் சற்று முந்தைய நிலையைக் குறிப்பாக உணர்த்தும் சொல். அடுத்தது தூறல் அல்லது மழை என்னும் நிலை இது. 

நெல்லைப் பேச்சு: "ஏலே ஐயா, மொட்ட மாடீல துணி காயுது. வானம் கூராப்பா இருக்கு. செத்த, துணிய எல்லா எடுத்துக் கொடுத்திட்டுப் போ ஐயா" மரகதம் தன் மகனிடம் வேண்டினாள். 

"என்ன பண்ண? இன்னா அன்னான்னு ஒரே கூராப்பா இருக்கு. மழயத்தான் காணோம்" மருதப்பன் சக விவசாயியிடம் புலம்பினான்.  

26. அல்லாடீட்டு - அல்லாட்டம் கொண்டு, அல்லாடிக்கொண்டு. 
அல்லாட்டம் = (துயரத்தில்) அலைதல். 
அல்லல் = துயரம் 
எழுதிவிட்டான்- இறப்பில் இறப்பு ((past perfect), எழுதிக் கொண்டிருந்தான்(past continuous) போன்ற சொற்களில் உள்ள விட்டு, கொண்டு எனும் சொற்களை 'ட்டு' என்று சுருங்கப் பேசுவது வழக்கம். 
எழுதிவிட்டான் – எழுதிட்டான்; எழுதிக்கொண்டிருந்தான்- எழுதிட்டிருந்தான். அல்லாடிக்கொண்டு - அல்லாடிட்டு; 
அழுத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்த 'அல்லாடீட்டிருந்தான், எழுதீட்டான்’ என்றும் சொல்கின்றனர். 

 27. சப்பளி - சிதைத்துத் தட்டையாக்கு 
சப்பை, சப்பள் - தட்டையானது., சுவையற்றது. 

"ஏன்டா அழுகுற" என்ற தாயிடம், "ராமுப்பய நான் செஞ்சு வெச்ச களிமண் புள்ளயார சப்பளிச்சிட்டுப் போய்ட்டான்" என்று சொல்லி அழுதான் அந்தச் சிறுவன். - சிதைத்துத் தட்டையாதல் இங்கே பொருளானது. 

" பத்து நாளுக்கு ஒருக்கா இந்தக் கொழாயில நல்ல தண்ணி வரும். அந்தக் கொழாயில தினமும் சப்பத் தண்ணி வரும்" - சங்கரன்கோயிலில் கேட்டது. - சுவையற்ற என்பது இங்கே பொருளானது. 

சிதைத்துத் தட்டையாக்குவது 'சப்பளித்தல்' என்றால், சமனாகத் தட்டையாக்குவதற்கு என்ன சொல்? அதுதான் 'அப்பளித்தல்'. அப்பளித்தல் - சமனாகத் தேய்த்துத் தட்டையாக்கினால் கிடைப்பது 'அப்பளம்'. 


 28. ஒக்கல் - இடுப்பு 

"ஏட்டீ, தம்பிய இப்படி ஒக்கல்லயே வச்சிட்டுத் திரிஞ்சா என்னக்கிதா அவன் நடக்கப் பழகுவான்" பக்கத்து வீட்டு பார்வதி அழகம்மையைக் கண்டித்தாள். 

ஒக்கல் = சுற்றம் (இலக்கியம்) 
"குறுமுயல் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு" - புறம் 34 
"பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை"- புறம் 69 
ஒக்கலில் வைத்து அமுதூட்டேன் - $ காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ் °# சொக்கநாதர். 


 29. குண்டு = ஆழமான, உரக்குழி 
குண்டு = உருளை, குளம், பருமன், 

 "தீநீர்ப் பெருங்குண்டு சுனைபூத்தக் குவளைக்" - புறநானூறு 116 
குண்டு எனும் சொல் மேற்குறிப்பிட்ட பொருட்களில் தமிழகமெங்கும் வழங்கினாலும், 'ஆழமான', 'உரக்குழி' எனும் பொருளில் பெரும்பாலும் நெல்லை மக்கள் பயன்படுத்துகின்றனர். 

"அவென் குடிச்சிட்டு எந்தக் குண்டுல உழுந்துக் கெடக்கானோ. யாருக்குத் தெரியிம்?" : குண்டு = ஆழமான, பள்ளமான. 

"நாளக்கிதான் மேலக் குண்டு வய அறுப்பு வெச்சிருக்கேன், ஆத்தா" : மற்ற இடங்களைவிடத் தாழ்வான பகுதியில் உள்ள வயல், குண்டுவயல் எனப்படுகிறது. 

"ஏட்டி இசக்கி, தொழுவத்துல இருக்க சாணிய குண்டுலக் கொட்டிட்டு வந்திரு" : குண்டு = உரக்குழி. 


 30. தாலம், தாலா = தட்டு, உண்கலம் 
உலோக உண்கலங்களைத் 'தாலா' என்று கிராமங்களில் வழங்குகின்றனர். 

 "ஏலே, சண்ட போடாம அவனவன் தாலாவத் தூக்கிட்டு வெரசாப் போங்க" ராமாயி பிள்ளைகளைப் சத்துணவுப்பள்ளிக்குச் செல்ல விரைவுபடுத்தினாள். 

பெருந்தோள் தாலம் பூசல் மேவா - புறநானூறு 12
ஒரு சமையம் சபல்பூர் சென்றிருந்தபோது, பல உணவகங்களில் உள்ள தகவல் பலகைகளில் இதைக் கண்டேன்: 
1 थाली - ₹ 60 அதாவது 1 தாலி/plate/தாலம் சாப்பாடு = ரூபாய் 60. 
இதுபோன்ற சிறு அறிவிப்புப் பலகைகள் வடநாட்டு உணவகங்களின் வாசலில் காணலாம். ஆனால், தாலம் நமது தூயதமிழ்ச்சொல், நமது கிராமங்களில் இன்னும் உயிரோடு. 
நகரத்தில்...ப்ளேட்?  


31. கரைச்சல் = தொல்லை, நச்சரிப்பு (வட்டார வழக்கு) 
கரைச்சல் = உருக்குகை, கவலை (இலக்கிய வழக்கு) 

"ஐயய்ய்யே.. கரைச்சல் பண்ணாமெ தூரப்போ சனியனே" பேருந்து நிலையத்தில் பிச்சைக் கேட்டு நச்சரித்தவனைத் தூர ஓட்டினான், கந்தசாமி. 

அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை. (யாழ்ப்பாண வழக்கு. 


 32. பைய - மெல்ல, மெதுவாக 
 பைய - பதுக்க (குமரி மா. வழக்கு) 

"சைக்கிள்ல பையப் போடான்னா, கேட்டாத்தான. இப்பப் பாரு குப்புற விழுந்துக்கெடக்கான்.."

 "பையப் பைய முன்னேறக் கையக் கொஞ்சம் காமி.." கண்ணதாசன். 

"வையகம் முழுதுடன் வளைஇப் பையென" - புறம் 69 


 33. உருப்பம் – வெப்பம் (புறம் 369) 
"ஏயப்பா! என்னா இன்னக்கி இவ்ளோ உருப்பமா இருக்கு. காத்திலயும் ஒரு அணக்கத்தக் காணமே அக்கினி நட்சத்திரம் முடிஞ்ச பின்னும் உருப்பம் தீரலியே"

உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை – அகம் 101 

வெயில் உருப்பு உற்ற வெம் பரல் கிழிப்ப – சிறுபாண் 8 


 34. தெருக்காடு – வீடுகள் அடர்த்தியாக உள்ள தெருக்கள் உடைய பகுதி. 

 “வாழக்கா யாவாரி ஒருத்தரும் வரலன்னா, நாங்களே தள்ளுவண்டி வைத்து தெருக்காட்டில் கொண்டுபோய் விக்க வேண்டியதான்” – வாழை வேளாணின் பேட்டியில் கேட்டது. 

 அட! வீடுகள் உள்ள பகுதியைத் ‘காடு’ எனச் சொல்கிறார்களே இந்த மக்கள்; ஏதோ, ஏதுகை மோனைக்காகச் சொல்கிறார்கள் போலும் என எண்ணினேன். இல்லையில்லை. காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எல்லாம் ஒரு காரணத்தோடு என்பதே பேச்சு வழக்கு. 

காடு = நெருக்கம் 
தாமரைக் காடு போன்றார் - சீவகசிந்தாமணி 

காடு = மிகுதி 
 எல்லாம் வெள்ளக் காடாய் இருக்கிறது. 

தெருக்காடு = தெருக்கள் மிகுதியாக உள்ள பகுதி. 


 35. நட்டாம - நின்றவண்ணம் 

 "என்ன அவசரமோ? வீட்டுக்கு வந்த பய நட்டாம நின்னுட்டே கஞ்சியக் குடிச்சிட்டு இப்பதான் வெளியில போனான்". 
 உட்கார்ந்து கஞ்சி குடிப்பது இயல்பு. வெகு இயல்பாக 'அங்க நின்னுக்கிடிருக்கான்' என்று சொல்பவர்கள் 'நட்டாம' என்ற சொல்லின் மூலம் அவசரம், கோபம், எதிர்ப்பு என ஒரு அழுத்தம் கொடுக்கும் சொல்லைப் பயன்படுத்துவது வியப்புதான். 

நடுதல் என்பது இயற்கையாகச் செடி போன்றவற்றை பூமியில் பதித்தலைக் குறிக்கிறது. நட்டுதல், நாட்டுதல் என்பன செயற்கையான கொடிமரம் போன்றவற்றை வலிய நிலைநிறுத்துதலைக் குறிப்பன. வெற்றிக்கொடி நாட்டுதலும் வலிய செய்யப்படும் ஒரு செயலே. 

நட்டாம - இது சிற்றூர் வழக்கு. 
நகரம் சார்ந்த சிற்றூர்களில், 'நட்டக்க, நட்டாக்க' என்று வழங்குவதைக் காண்கிறேன். 

'நடப்பட்டதாக' என்பது, நட்டாக்க' ஆகியிருக்கலாம். 


36. திசை சுட்டுதல் 

ஓர் ஊரின் அருகில் தென்திசையில் சந்தையும் வடதிசையில் சுடுகாடும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஊரில் ஒருவர் "தெக்கே போறேன்" என்று சொன்னால் அவர் சந்தைக்குப் போகிறார் எனப் பொருள். "அவன் வடக்க போய்ட்டான்" என்றால்.. உங்களுக்கே இப்போது புரிந்திருக்குமே! 

ஊரின் அருகில் உள்ள குளம்,ஆறு போன்றவை, வயல் அல்லது தோப்புகள் உள்ள பகுதி, இரவில் இயற்கை கழிப்பு இடம், விறகு சேகரிக்கும் காடு, இவை எல்லாவற்றையும் திசையாலேயே உணர்த்துவர். இது இயற்கையோடு ஒன்றி வாழ்வதின் ஒரு கூறு! 

நகரங்களில் இவ் வழக்கு கிடையாது. சென்னை மக்களுக்குத் திசையே குழப்பமான ஒன்றுதான். 


37. அந்தானிக்கி - அந்த மேனிக்கு, உடன் அப்படியே, அப்பொழுதே 

"ஒரு இடி இடிச்சது பாத்துக்க. அப்புறம் பளீர்னு ஒரு மின்னலு. அந்தானிக்கி புடிச்ச மழதான்..." லட்சுமி தன் தோழியிடம் கதை சொல்லிக் கொண்டிருந்தாள். 

ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொடர்பிடியாகச் சட்டென நடக்கும் செயலை இப்படித்தான் சொல்கிறார்கள். 

சிற்றூர் வழக்கு இவ்வாறிருக்க, நகரங்களில் "அந்தமானிக்குப் போனவன்தான். திரும்பி வரவேயில்லைலா" எனக் கதை சொல்லி முடிப்பார்கள். நகரத்து வழக்கு, 'அந்தமானி, அந்தாமேனி' என்பனவாகும். 

மேலும் சில சொற்கள்: 
குந்தானி - உருளைபோல் குண்டானபெண். 
கண்டமானிக்கி - கண்டமேனிக்கு. 
தோத்தானி - தோற்றுப் போனவன்/ள். 
புழுகானி/புழுகுனி - புழுகு பேசுபவன் 


 38. ‘க்' - இக்கன்னா 

"என்னத்த சொல்லுயது. அவன்தான் ஒரு 'இக்கன்னா' வெச்சிட்டுப் போய்ட்டானே. 

"ஒரு பொண்ணடி பாவம் பொல்லாதது பாத்துக்கிடும்". திருமணம் முடிஞ்ச மறுநாள் மாப்பிள்ளைக்காரன் பெண் பிடிக்கவில்லை, வேண்டாம்னு சொல்லிவிட்டுத் தான் வேலை பார்க்கும் ஊருக்குப் பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டான். காரணம் சொல்ல மறுத்து விட்டான். பெண் ஆதரவற்று நிற்கிறாள். ஊர்ப் பெரியவர்கள் காரணம் விளங்காமல், முடிவு எடுக்கமுடியாமல் பெண்ணுக்காகப் பரிதாபப்பட்டுப் பேசும் சொற்கள் இவை. 

'இக்கன்னா' - இழுபறியில் நிறுத்தி வைக்கும் ஒரு குறிப்புச் சொல். 

மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இருக்கிறதே, அதற்காக! வேலை செய்வது எதற்காக? எனும்போது சொற்றொடர் முடிந்துவிடும். "மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இருக்கிறதே, அதற்காகக்.." இங்கே 'க்' வைத்தாயிற்று. எழுதுவதையும் நிறுத்தியாயிற்று. தொடர் முடியவில்லை. மேலும் என்ன சொல்லப்படும் எனத் தெரியாது. இதுதான் தொங்கலில் விடுவது. ஒற்று இடுவதின் வலிமை இங்கே புரிகிறது. க், ச், த், ப், எல்லாம்தான் இருக்கிறது. 'க்' முதலில் வருகிறது; அதனால், முதலில் வருவதையே ஆள்வது வழக்கம்தானே. 


 39. பேச்சு! 
நெல்லை வழக்கில் ‘பேச்சு’ எனும் சொல்லே சிறப்பான ஒன்றுதான். 

 “நீரு என்ன சொல்லுதீரு? பேச்சுன்னா எல்லாம்தா.” 

பேசிப்புட்டான், பேசிட்டான், பேசிப்போடுவேன் – இவையெல்லாம் திட்டுதலைக் குறிப்பனவாம். 
பேசிட்டான், பேசீட்டான், பேசிப்புட்டான் - இவை பேசிவிட்டான் என்பதன் சுருக்கம்தான். 
 "கட மொதலாலி என்னப் பேசிப்புட்டாரு" - இது திட்டுதல்

பேசிப்போடுவேன் - பேசிவிடுவேன் 
"நல்லாப் பேசிப்போடுவேன் பாத்துக்க. ஓடிப் போயிரு" - இதுவும் திட்டுதல்

 "என்னா பேச்சு பேசுறான், சின்னப்பய" - இது மிகையாகப் பேசுதல் 

ஆமா, அப்படியே நீரு பேசீட்டாலும் – இது நக்கல் 


40. முனி – நுனி (edge) 

 “அவனுக்கு அடிக் கரும்பு, எனக்கு மட்டும் முனிக் கரும்பா. எனக்கு வேண்டாங் ஆத்தா..“

"முருகன்தான் முனி விழுதப் புடிச்சத் தொங்கட்டான் ஆடினான்” (ஆலமரத்தின் நுனி விழுது) 

படித்தோர் மத்தியில் ‘நுனி’யாக இருந்தாலும் நெல்லைச் சிற்றூர்களில் ‘முனி’ என்பதுதான் வழக்கு. அது அநாகரிகம்போல் தோன்றினாலும் ‘முனி’ என்பதிலிருந்து பிறந்ததுதான் ‘நுனி’ என்பது வியப்பே. சிற்றூர்த் தமிழை எள்ளல் வேண்டா. 

முள்-முன்-முனை-முனி - நுனி = முற்பகுதி. 


 41. உடல் மொழி சில : 

ஒக்கல் – இடுப்பு 
ஒன்ட்ரக் கண்ணு - ஒரு கண் ஊணம் 
கண்ணுமுளி - கண்விழி 
கொதவளை– குரல்வளை 
கோணக்காலு – நொண்டி 
சக்கரை – சிறுவர்களின் பாலுறுப்பு 
சங்கு – கழுத்து 
செவுளு, செவுடு – செவிள், கன்னமும் காதும் சேர்ந்த பகுதி 
தெத்துப் பல்லு - தெற்றுப் பல் 
நெஞ்சான்கொல – நெஞ்சகம் 
நெத்தி – நெற்றி 
மண்ட – மண்டை 
 நொட்டக்கை – முடமான கை 
நொட்டாங்கை – இடது கை 
 பிட்டி – பிட்டம் 
பொடதி, பொடறி - பிடரி 
பொறத்தால – பின்முதுகில் 
மயிரு – இழிசொல் 
முட்டங்கால், முட்டிஜ– முழங்கால் 
முட்டி – விரல்களை மடக்கிய கை 
மேலுக்கு - உடம்புக்கு 
மொகர, மூஞ்சி – முகம் 
மொகரக் கட்ட, மோரக்கட்ட – முகக் கட்டு  
மொண்ண, மொழுக்க – வழுக்கை, மொழுக்கு 
மொளி - மொழி, கணு, கைகால்களின் முட்டி எலும்பு, 



 42. நெல்லை அண்ணாச்சிமார் பேச்சு வழக்கின் அடையாளமாக பிற பகுதி மக்கள் கிண்டலாகிஅ குறிப்பிடும் விளிச் சொற்களைக் காண்போம். 

ஆண்பால் விளி: 
ஏலே! 
 லே! 
லேய்! 
ஏலேய்! 
ஏய்யா! 
ஏடே! 
ஏம்டே! 

பெண்பால் விளி: 
ஏட்டீ! 
ஏமுட்டீ? 
ஏக்கீ! (இழி விளிச்சொல்) 

ஆண்பால் வினவு: 
ஏம்லே? 
ஏம்லேய்? 
ஏன்டே? 
ஏன்டேய்? 

 பெண்பால் வினவு: 
ஏலா? 
ஏம்லா? 

நாங்க திருநேலிக்காரவுக.. 
நெல்லை வட்டாரப் பேச்சு வழக்கு பாகம் 1 நிறைவுபெற்றது. 

 பாகம் 2 விரைவில் தொடரும். நன்றி!