அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Monday, October 19, 2020

ஆதிச்சநல்லூர் - தொடர் 3

 தொடர் – 3 : 

 ராபர்ட் புரூஸ் ஃபூட்டே – இவரைத்தாம் இந்திய உள்நாட்டு அகழாய்வின் தலைமகன் என்று சொல்லலாம். இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர் சேகரித்த தொல்பொருட்களை FOOTE collection எனும் பெரும் நூல் ஒன்றில் தந்துள்ளார். 

 அந் நூலின் தொடக்கம் இப்படித்தான் உள்ளது : 


“11-01-1883 :தாமிரபரணி ஆற்றுப் படுகையில் உள்ள செய்துங்கநல்லூரில் என்னால் கண்டெடுக்கப்பட்ட...” 

 என்னவொரு பெருமை பாருங்கள்!

 செய்துங்கநல்லூருக்கு அடுத்த பகுதியே ஆதிச்சநல்லூர். 

 திருச்செந்தூர்ச் சாலையின் இடப்பக்கம் தாமிரபரணி ஆறு. ஆற்றின் தென்கரைக்கும் சாலைக்கும் மத்தியில் உள்ள ஒரு பெரிய மண்மேட்டில் பாண்டிராசா கோயில் உள்ளது. 



இது உள்ளூர் மக்களின் நாட்டார் தெய்வக் கோயில். கோயிலைச் சுற்றியுள்ள மேட்டுப் பகுதி அனைத்துமே தொல்காலத்து இடுகாடாக இருந்து முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட இடம். 

ஆனால், முதலில் அகழ்வாய்வு நடந்த இடம் வலப்பக்கமுள்ள பெரும் பரம்புதான். 1876ல் செருமானி நாட்டின் பெர்லின் நகரத்தவரான முனைவர் ஜாகுவார் என்பவர் தொடங்கி வைத்த ஆய்வு இங்கேதான் நடந்தேறியது. அவரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் யாவும் பெர்லின் அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டன. அப் பொருட்களின் முழு விவரம் கிடைக்கவில்லை. 


 114 ஏக்கர் அளவிலான பெரும் பரம்பு முழுவதும் சரளைக் கற்களாலும் கடினமான பாறைகளாலும் ஆனது. இதுவரை தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வட பகுதியில்தான் தொல்லாய்வுகள் நடந்து வந்துள்ளன. 

- தொடரும்  

Tuesday, October 13, 2020

ஆதிச்சநல்லூர் - தொடர் 2

 பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டுத் திருச்செந்தூர் சாலையில் சென்றால் கருங்குளம் தாண்டியவுடன் வருவது புளியங்குளம். இடம் வலமாக இருபக்கமும் பிரியும் சிறிய சாலையின் வலமாக உள்ளவை 13 ஏக்கரில் அமைந்த பெரிய பறம்பும் அதன் சரிவுப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரும். இடமாகத் திரும்பிச் செல்லும் சாலையில் இருப்பவை அருங்காட்சியகக் கட்டிடமும், பாண்டிராசா கோயிலும். 

முந்தைய தொல்லாய்வுகள் அனைத்தும் இப் பறம்பில்தான் நடந்தேறின. அதனால் வலமாகத் திரும்பி அப் பெரும் பரம்பின் மீதேறிச் சுற்றுமுற்றும் அலைந்து திரிந்து பார்த்ததில் தொல்லாய்வு நடக்கும் ஓர் அடையாளமும் கிடைக்கவில்லை. அதனால், கீழிறங்கிப் பரம்பின் அடிவாரத்தில் உள்ள ஊரின் முகப்புக்குச் சென்று, அங்கேயொரு அரசமரத்தடியில் ஓய்வாக இருந்த ஊர்மக்களிடம் உசாவியதில் இரு தகவல்கள் கிடைத்தன. 

ஆதி மித்த நெல்லூர் – ஆதியிலேயே மிகுந்த நெல்லை விளைவித்த நெல்லூர் என்பதே பேச்சு வழக்கில் ஆதித்தநல்லூர் ஆகியது என்பது ஒரு தகவல். 

திருச்செந்தூர் சாலையின் இடதுபுறம் உள்ள மண்மேட்டில் பாண்டியராசா கோயில் உள்ளது. அந்த மண்மேட்டில்தான் தற்போது தொல்லாய்வு நடக்கிறது என்பது இரண்டாம் தகவல். 

தகவல் கேட்டுக்கொண்டிருக்கும்போது பறம்பின் தென்கிழக்கு இறக்கத்திலிருந்து ஆறு மகிழுந்துகள் என்னைக் கடந்து சென்றன. தொல்லாய்வுக்குழு தான் செல்கிறது எனப் புரிந்தது. பின் தொடர்ந்தேன். சென்ற வண்டிகள் அனைத்தும் அருங்காட்சியக வாசலுக்குச் சென்று நின்றன. நானும்தான். 


அதில் முதல் மகிழுந்திலிருந்து இறங்கியவர்களுள் ஒருவர் உதயச்சந்திரன், தொல்லாய்வு இயக்குனர். தினச் செய்தி வாசிப்பில் இருந்து ஊகித்தது. மற்றொருவர்... யாரெனத் தெரியவில்லை. 



அருகில் நின்ற அலுவலர் ஒருவரிடம் கேட்டேன். ‘கா.ராசன், தொல்லாய்வு அறிஞர்’ என்ற பதில் வந்தது. எதிர்பார்க்கவில்லை. அவரைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்தாலும் தொல்லாய்வுத் துறையில் அவர் ஆற்றி வரும் அரும் பணியினை அறிந்து மனத்தில் போற்றியிருக்கிறேன். இன்று நேரில் கண்டேன். 


மகிழுந்திலிருந்து இறங்கியவர்கள் சுருசுருப்பாக பாண்டிராசா கோயில் மண்மேட்டில் ஏறத் தொடங்கினார்கள். அங்கே, பல குழிகள் தோண்டப்படும் அடையாளம் தூரத்திலேயே தெரிந்தது. 

 நானும் பேசாமல் பின் தொடர்ந்தேன்.

 - தொடரும்.

Saturday, October 10, 2020

ஆதிச்சநல்லூர் தொடர் 1



ஆதிச்சநல்லூர்த் தொல்லியல்களப் பார்வை :

 நாள் 12-09-2020, வெள்ளிக்கிழமை 

வெகு நாட்கள் தள்ளிவைத்த ஆதிச்சநல்லூர் செலவு இன்று நிறைவேறியது. பெயர் ஆதிச்சநல்லூர் என்றாலும் தொல்லியல் ஆய்விடமாகிய பரம்பும் அருங்காட்சியகமும் இருப்பது ‘புளியங்குளம்’ எனும் ஊரில்தான். 

முதல் தடவை சென்று பார்த்து, அங்குள்ள அருங்காட்சியகத்தின் அவலங்களை 14-11-2017 அன்று சென்று பதிவு செய்திருந்தேன். தமிழக அரசையும் வேண்டியிருந்தேன். 22/11-2017 அன்று அமைச்சர் மாஃபா அவர்கள் அவ்விடத்திற்கு வந்திருந்தார். அன்றே எனது அந்தப் பதிவுக்கு ‘ஆவண செய்வதாகப்’ பதிலும் தந்திருந்தார். 

இதற்கிடையில், 07-02-2018ல் அருங்காட்சியகம் வந்திருந்த தூத்துக்குடி துணை ஆட்சியர் உடைந்த பானைகள் அனைத்தும் புதிய மாதிரிகள் என்றும் மெய்யானவை அல்ல என்றும் எரிகிற நெய்யில் எண்ணெய் ஊற்றிவிடுப் போனார்.


அதற்குப் பின் விரைவாக நடந்த பல மாற்றங்களில் ஒன்று ‘நடுவணரசு தமிழகத்தில் ஆய்வு செய்யப் பணம் ஒதுக்காது விலகிக்கொண்ட நற்செயல்’. நடுவணரசுக்கு ஒரு பெரிய கும்பிடு. 

 அதற்குப்பின் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையிலும் 02-02-2018ல் ஓரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ‘ஆதிச்சநல்லூர் களத்தின் மாதிரிகளுக்கானக் கரிமப் பரிசோதனைக்கு அரசு நிதி ஓதுக்கீடு செய்யவேண்டும்’ என்பதே அவ் ஆணை.  

இப்போது தமிழக அரசு தன்னால் இயன்ற பணிகளை ஆய்வுலகுக்குச் செய்து வருகிறது. மகிழ்ச்சி! ஆதிச்சநல்லூரின் 6வது தொல்லியல் கள ஆய்வுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 32 இலக்கம். மே மாதம் 25ஆம் நாளிலிருந்து தொடர்ச்சியாக அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து தமிழகத் தொல்லாய்வு அலுவலர் பாஸ்கர் மற்றும் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடந்து வருகிறது. 


 இதுவரை 72 முதுமக்கள் தாழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள பலதரப்பட்ட பொருட்களைப் பட்டியல் இடும் வேலையும் மும்முரமாக நடந்து வருகின்றது. இனி எனது பயண நிகழ்வுகளைக் காண்போம்!  

தொடரும்