அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, October 23, 2019

புத்தா!

புத்த தேவா
என்னை மன்னித்துவிடு!
ஒட்டி உலர்ந்த
உன் யாக்கை
எனக்கு வேண்டாம்.
எல்லோரும் எண்ணுகிறார்கள்
பசியின் ஆழ்ந்த மயக்கத்தில்
நீ பட்டறிவு பெற்றதாக;
நானறிவேன் அதை!
வெயிலில் வாடிக்
களைத்த உனக்கு
இதம் தந்ததே
அந்தப் போதிமரம்;
இதம் தந்த அறிவே
உனது புத்துயிர்ப்பு!

நீ புத்தனானது
போதிமரத்தால் அல்ல,
என்று நீ உன்
அரண்மனையின் இதம் நீங்கி
வெளிப் போந்தாயோ
அந்த நொடி...
ஓ கௌதமா
இல்லை இல்லை..
ஓ புத்ததேவா!

என்னை மன்னித்துவிடு!
ஒட்டி உலர்ந்த
உன் யாக்கை
எனக்கு வேண்டாம்!
என்னைப்போல் நீயும்
வறுமையில் வாழ்ந்திருந்தால்...
வெந்ததைத் தின்று
விதிவந்து செத்திருப்பாய்!
பசியில் பட்டறிவு
துளிர்க்கும் எனச் சொன்னது யார்? அரண்மணையின் இன்ப வாழ்வை
எனக்கும் தா!
அந்தத் துளிநேரத்தை...
நீ நீங்கிய போழ்தின்
ஆழ்ந்த அமைதியை...
நானும் பெறவேண்டும்!


தமிழில் பிறமொழிச் சொற்கள் வழங்கும் முறை

'வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்கு உரியவாய் வாரா' (சேனாவரையர்).

பொதுவாக, பெயர்ச் சொற்களையே ஒரு மொழி கடனாகப் பெறும். இதை மனதில் நிறுத்தி, பிறமொழிச் சொற்கள் தமிழில் வழங்கும் முறைகளைக் காண்போம்.

1  த், ஸ், ல் எனும் இடையெழுத்துகள்  'ற்' ஆகத் திரியும்
உத்சவம் - உற்சவம்
பஸ்பம் - பற்பம்
கல்பம் - கற்பம்

2 'ட' வில் தொடங்கும் பிறமொழி முதற் சொற்கள் 'த' என முதற்சொல்லாகத் திரியும்
டமருகம் - தமருகம்
டொப்பி - தொப்பி

 3 'ட' எனும் முதல் எழுத்து  'இ' முன்னெழுத்தைப் பெறுவதும் ஆம்.
டம்பம் - இடம்பம்

4 ஆகார ஈறு ஐகாரமாகும்
பிக்ஷா - பிச்சை

 5 ர, ல முன்னெழுத்துக்கு முன் 'இ' துணை முன்னெழுத்து சேரும்
ராமன் - இராமன்
லாபம் - இலாபம்