அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Thursday, November 7, 2019

மரம் இல்லாது மழையேது

ஒற்றை மார்போடு
மலைமேலேறிய கண்ணகி
மரத்தடியில் நிற்பதாகத் தன்
கணவனுக்குத் தூதுவிட,

கோவலனின் புட்பக விமானம்
கண்ணகியைத் தேடி
சுற்றிச்சுற்றி அலைந்தது
எந்த மரமென்று தேடியல்ல;
மலையில் ஏது மரம்
என்ற வாதையில்.

கணவன் வாரானென்று
சலித்துப் போய்
மொட்டைப் பாறையில்
குதித்து உயிர்விட்ட
கண்ணகியைக்
கண்டு வருந்திய மேகம்
இப்போதெல்லாம்
நீராய்ச் சொரிவதில்லை
மழையாய்ப் பெய்வதில்லை
அங்கங்கே
காறித் துப்பிவிட்டுக்
கடந்து செல்கிறது.

நானோர் தனியன்

பிறந்தநாள் முன்னெடுப்பு!
பரிசும் பணமும் கையில்;
முதியோர் இல்லம் செல்லும்
பெருமைக்குப் பேர்
கருணை என்றாகியது.

முதியோர் இல்லத்தில்
பரிசும் பணமும்
கொடுத்து முடிந்த வேளை!
பெரியவர் ஒருவர்
அருகமர்ந்து சொன்னார்,
“பாவம் நீங்கள்!
ஆண்டவன் உங்களை
இப்படியும் சோதிப்பானோ?”

“என்ன ஆச்சு எனக்கு?”

“ஆண்டவனுக்கு உகந்தவர்
அவன் பாதுகாப்பில்
இருப்பார்தானே;
பிடிக்காது போனால்
உலகில் அலைந்து திரிய
விடுவார்தானே?”

"ஆமாம்!"

"நான் ஆண்டவனுக்கு உகந்தவன்;
பாருங்கள் என்னை
நானோ
எங்கும் அலையவில்லை
இங்கேயே அமைந்துள்ளேன்.
நீங்கள்தாம் பாவம்!
கடவுளும் கைவிட்டாரோ?
அலைஅலையென
அலைகிறீரே”

சட்டெனத் திடுக்குற்றேன்!
அவர் கூறியது
என் மனதையா?
மனம் தாங்கும் உடலையா?

அகண்ட இப்புலனத்தில்
மனிதர் தம் முன்னே
தாமே கட்டிய
மாபெரும் கம்பிவலை;
வலைக்குள் குரங்கென
விடாது சுற்றும் அடம்!

அப்பக்கம் இப்பக்கம்
கம்பிவலை நடுப்பக்கம்;
எப்பக்க மனிதன் கைதி,
எப்பக்க மனிதன் கங்காணி?
யாருக்கு யார் கைதி?

நானோ கைவிடப்பட்டவன்?
நானே தனியன்!